தாபா ஸ்டைலில் சுவையான கடாய் பன்னீர் இப்போது வீட்டிலேயே செய்யலாம்
புரத சத்து நிறைந்த பன்னீர், வெஜிடேரியன்களுக்கு மிக பெரிய வரம் எனலாம். அசைவ உணவில் கிடைக்கக்கூடிய அதே ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய இந்த உணவை, பல விதமாக சமைக்கலாம். ஒரு சிலர், மாலை டிபன் போல சாப்பிட ஏதுவாக சமைப்பார்கள், சிலரோ, சப்பாத்தி, புலாவ் போன்ற உணவுகளுக்கு ஏற்ற கரி போல சமைப்பதை விரும்புவார்கள். எப்படி சமைத்தாலும், பன்னீர் சுவை கூடுமே தவிர, குறையாது. புரோட்டீன் சத்து அதிகமுள்ள பன்னீரை உணவுடன் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இன்று, தாபா ஸ்டைலில் சுவையான கடாய் பன்னீர் வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
200 கிராம் பன்னீர் 1 பெரிய வெங்காயம் நறுக்கியது 2 தக்காளி நறுக்கியது 1 tsp மிளகாய்த்தூள் 1 tsp மல்லித்தூள் 1 tsp மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு தாளிக்க 3 tsp எண்ணெய் 1 tsp சோம்பு 4 கிராம்பு 2 பட்டை 6 பல் பூண்டு 2 பச்சை மிளகாய் நீளமாக கீறியது
செய்முறை
முதலில் பன்னீரை துண்டுகளாக்கி, சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாய் அல்லது வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களான சோம்பு, கிராம்பு, பட்டை, பூண்டு, பச்சை மிளாகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் நீளமாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும், அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, உப்பு தூவி 1 நிமிடம் கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
செய்முறை
பச்சை வாசனை போகும் வரை, கொதிக்கவிடவும். இப்போது அந்த கிரேவியிலிருந்து எண்ணெய் தனியாக பிரியும் நிலை வந்ததும், அதில் நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கினால், கடாய் பன்னீர் கிரேவி தயார். இதை சப்பாத்தி, நாண், புலாவ் போன்ற உணவுகளுக்கு சைடு டிஷ்-ஆக வைத்து கொள்ளலாம். இதே கடாய் பன்னீர், கிரேவி போல இல்லாமல், மேலும் சுண்டவைத்தால், மாலை நேர ஸ்டார்டர் போலும் எடுத்துக்கொள்ளலாம்.