பொது வருங்கால வைப்புநிதியில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடி பெற முடியுமா?
இந்தியாவில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் பொது வருங்கால வைப்புநிதித் திட்டங்களை, வங்கிகளும், வங்கியல்லாத மற்ற சில நிதி சேவை வழங்கும் நிறுவனங்களின் மூலம் மத்திய அரசின் ஆதரவுடன் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு வங்கியின் வட்டி மற்றும் பணவீக்கத்தை கடந்து லாபம் பெற வேண்டும் என்பவர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதியும் ஒரு தேர்வாக இருக்கிறது. ஆனால், பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், ஒரு கோடி ரூபாய் வரை ஒருவரால் பெற முடியுமா? முதலில், பொது வருங்கால வைப்புநிதித் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு குறைந்தபட்சமாக ரூ.500-ல் இருந்து, ரூ.1.5 லட்சம் வரை ஒருவரால் முதலீடு செய்ய முடியும்.
பொது வருவங்கால வைப்புநிதி முதிர்வும், நீட்டிப்புக் காலமும்:
பொது வருங்கால வைப்புநிதி திட்டமானது, 15 ஆண்டு முதிர்வு காலத்துடன் வழங்கப்படும் திட்டமாகும். எனினும், முதர்வு காலத்திற்குப் பின்பு உடனடியாக நம்முடைய முதலீட்டுப் பணத்தை வெளியே எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. திட்டம் முதிர்வடைந்த பிறகு மேற்கொண்டு திட்ட காலத்தை ஐந்து, ஐந்து ஆண்டுகளாக எத்தனை முறை வேண்டுமானாலும், திட்ட காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம். ஒருவேளை 15 ஆண்டு முதிர்வு காலத்திற்குப் பின்பு, திட்ட காலத்தை ஐந்தாண்டுகள் நீட்டிக்கும் பட்சத்தில், அந்த ஐந்து ஆண்டுகளில் நாம் முதலீடு செய்திருக்கும் பணத்தில் 60% மட்டும் அவசர காலத்தில் எடுத்துக் கொள்ளும் வசதி அளிக்கப்படுகிறது. முதிர்வு காலத்திற்குப் பின்பு திட்டத்தை நீட்டிப்பதன் மூலம், ஒரு கோடி வரையிலான மொத்தப் பணத்தை நாம் பெற வாய்ப்புகள் இருக்கிறது.
ஒரு கோடி ரூபாய் பெறுவது எப்படி?
பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட ரூ.1.5 லட்சம் ரூபாயை 25 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், 25 ஆண்டுகள் முடிவில் ஒரு கோடி ரூபாய் பணத்தை நம்மால் பெற முடியும். பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் அல்லது மாதத்திற்கு ரூ.8,334ஐ முதலீடு செய்வதன் மூலம், 25 ஆண்டுகால முடிவில் மொத்தமாக ரூ.1.03 கோடியை நாம் பெற முடியும். கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல், பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 7.1% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. மேற்கூறிய கணக்கீடானது, 25 ஆண்டுகளுக்கு 7.1% வட்டி என்ற அளவைக் கொண்டு கண்கிடப்பட்டிருக்கிறது.
வருமான வரி விலக்கு:
மேற்கூறிய கணக்கீட்டின் படி பொது வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் என 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் பட்சத்தில், ஒட்டுமொத்தமா ரூ.37.50 லட்சத்தை நாம் முதலீடு செய்திருப்போம். 25 ஆண்டு கால முடிவில் 7.1% என்ற வட்டி விகித்தத்தின் கீழ், ரூ.65.58 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.1.03 கோடி நமக்குக் கிடைக்கும். பொது வருங்கால வைப்புநிதி கீழ் நாம் முதலீடு செய்யும் ரூ.1.5 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு, வருமான வரி பிரிவு 80C-யின் கீழ் நம்மால் வருமான வரி விலக்கு பெற முடியும். மேலும், பொது வருமான வைப்புநிதி திட்ட முதிர்வுக்கு பின்பு கிடைக்கும் தொகையும் வருமான வரி விலக்கிற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.