Page Loader
மீண்டும் தமிழகத்தில் அரசியல் கொலை; மதுரையில் நாதக கட்சி துணைச் செயலாளர் வெட்டிக்கொலை
பாலசுப்பிரமணியன், மர்ம கும்பல் ஒன்றால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்

மீண்டும் தமிழகத்தில் அரசியல் கொலை; மதுரையில் நாதக கட்சி துணைச் செயலாளர் வெட்டிக்கொலை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 16, 2024
12:59 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதன் பதட்டம் அடங்குவதற்குள்ளாகவே மதுரையில் மற்றொரு அரசியல் கொலை நடந்தேறியுள்ளது. இன்று (ஜூலை 16) காலையில், மதுரை வடக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மர்ம கும்பல் ஒன்றால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நாதக கட்சி துணை செயலாளர் பாலசுப்பிரமணியன். இவர் இன்று காலை தல்லாகுளம் பகுதியில் உள்ள வல்லபாய் ரோட்டில் சென்றபோது மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அவரை கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளது. தப்பி ஓட முயற்சித்த பாலசுப்ரமணியனை விடாமல் ஓடஓட விரட்டி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளது அக்கும்பல்.

ட்விட்டர் அஞ்சல்

நாதக கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை

விசாரணை

காவல்துறை விசாரணை

மர்ம கும்பல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாலசுப்ரமணியன் இறந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தல்லாகுளம் போலீஸார், பாலசுப்பிரமணியனின் உடலை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆரம்ப கட்ட விசாரணையில், பாலசுப்பிரமணியனுக்கும் அவரது நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் இதில் அரசியல் விவகாரம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் ஆயுத புழுக்கமும், அரசியல் கொலைகளும் அதிகரித்து வருகின்றன என்பதையே இந்த சம்பவம் மேலும் வலுவாக எடுத்துக்காட்டுகிறது.