ஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்த கேரள பெண் இந்தியா திரும்பினார்
செய்தி முன்னோட்டம்
ஏப்ரல் 13 ஆம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரானின் புரட்சிகர காவலர்களால் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலில் இருந்த ஒரு இந்திய மாலுமி பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததாக வெளியுறவு அமைச்சகம்(MEA) இன்று தெரிவித்துள்ளது.
"ஈரான் சிறைபிடித்த எம்.எஸ்.சி ஏரீஸ் என்ற கொள்கலன் கப்பலின் இந்தியக் குழு உறுப்பினர்களில் ஒருவரான கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த இந்திய டெக் கேடட் ஆன் டெஸ்ஸா ஜோசப், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கினார்." என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதிவிட்டுள்ளார்.
தெஹ்ரானில் உள்ள இந்திய மிஷன் மற்றும் ஈரானிய அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் அவர் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
ஈரானிய அதிகாரிகளுடன் இந்தியா தொடர்பில் இருப்பதாக தகவல்
"தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இந்த விஷயத்தை கையாண்டு வருகிறது. அந்த கொள்கலன் கப்பலுடன் சிக்கிய மீதமுள்ள 16 இந்திய பணியாளர்களுடன் தொடர்பில் உள்ளது. அந்த குழு உறுப்பினர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர் மற்றும் இந்தியாவில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளனர்" என்று MEA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மீதமுள்ள குழு உறுப்பினர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக ஈரானிய அதிகாரிகளுடன் இந்தியாவும் தொடர்பில் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் அப்துல்லாஹியனிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.