Page Loader
ஏமனில் நிமிஷா பிரியாவின் மரணதண்டனையை ஒத்திவைக்க உதவிய 'இந்தியாவின் கிராண்ட் முப்தி' ஷேக் அபுபக்கர் அகமது யார்? 
'இந்தியாவின் கிராண்ட் முஃப்தி ', முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார்

ஏமனில் நிமிஷா பிரியாவின் மரணதண்டனையை ஒத்திவைக்க உதவிய 'இந்தியாவின் கிராண்ட் முப்தி' ஷேக் அபுபக்கர் அகமது யார்? 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 16, 2025
01:18 pm

செய்தி முன்னோட்டம்

ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா ப்ரியாவின் மரணதண்டனை ஒத்திவைக்கப்படுவதை உறுதி செய்ததில் பிரபல முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் முக்கிய பங்கு வகித்துள்ளார். ஷேக் அபுபக்கர் அகமது என்று அதிகாரப்பூர்வமாக அறியப்படும் இவர், 'இந்தியாவின் கிராண்ட் முஃப்தி ' என்று மதிக்கப்படும் 94 வயதான இஸ்லாமிய மதகுரு. 2017 ஆம் ஆண்டில் நிமிஷா கொன்றதாகக் கூறப்படும் ஏமன் நாட்டவரான தலால் அப்தோ மஹ்தியின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த ஏமனில் உள்ள மத அதிகாரிகளுடன் அபுபக்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கொலையில் நிமிஷாவின் பங்கு இருப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டு, இன்று ஜூலை 16 ஆம் தேதி அவருக்கு மரணதண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. இப்போது மரணதண்டனை தாமதமாகியுள்ளது.

பேச்சுவார்த்தை

உம்மன் சாண்டியின் வேண்டுகோளுக்கு இணங்கி பேச்சுவார்த்தை நடத்திய அபுபக்கர் 

கேரள செவிலியரின் மரணதண்டனையை நிறுத்த ஷேக் அபுபக்கர் அகமது கடைசி நிமிட முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கு ஏமன் சூஃபி அறிஞரின் ஆதரவும் கிடைத்ததாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் வேண்டுகோளின் பேரில் அவர் தலையிட்டதால், நிமிஷா பிரியாவின் மரணதண்டனை நிறுத்தப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், முஃப்தி ஆற்றிய பங்கைப் பாராட்டினார். "அவரது முயற்சிகள் வெற்றிபெற கேரளா ஒற்றுமையாகப் பிரார்த்தனை செய்கிறது. மதம் மற்றும் சமூகத்தின் பெயரால் மனிதர்களைப் பிளவுபடுத்தவும் வெறுப்பையும் த்வேஷத்தையும் வளர்க்கவும் முயற்சிகள் நடைபெற்று வரும் இன்றைய காலகட்டத்தில் மனிதநேயம் மிக முக்கியமானது என்பதை மாண்புமிகு காந்தபுரம் உஸ்தாத் நமக்குக் காட்டியுள்ளார்" என்று அவர் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவில் எழுதினார்.

யார் அவர்

ஷேக் அபுபக்கர் அகமது யார்?

ஷேக் அபுபக்கர் அகமது கேரளாவைச் சேர்ந்தவர். அவர் இந்தியா மட்டுமல்ல, தெற்காசியா முழுவதும் சன்னி முஸ்லிம்களிடையே மதிக்கப்படும் ஒரு நபராக உள்ளார். 'இந்தியாவின் கிராண்ட் முஃப்தி' என்று பரவலாக அறியப்படும் இந்தப் பட்டம் அதிகாரப்பூர்வமானது அல்ல. இஸ்லாமியத்தில், முஃப்தி என்பவர் இஸ்லாமிய சட்டம் (ஷரியா) தொடர்பான விஷயங்களில் சட்டக் கருத்துக்களை (ஃபத்வாக்கள்) வெளியிடத் தகுதியுள்ள ஒரு முஸ்லிம் அறிஞர் ஆவார். அவர்கள் இஸ்லாமிய சட்டத்தின் விளக்கவுரையாளர்களாகச் செயல்பட்டு, மத மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் வழிகாட்டுதலை வழங்குகிறார்கள். "கிராண்ட் முஃப்தி" என்ற சொல் பெரும்பாலும் சவுதி அரேபியாவின் கிராண்ட் முஃப்தியைப் போல ஒரு பிராந்தியத்திலோ அல்லது நாட்டிலோ மிக உயர்ந்த பதவியில் இருக்கும் முஃப்தியைக் குறிக்கிறது. எனினும், இந்தியாவில் அதிகாரப்பூர்வ கிராண்ட் முஃப்தி இல்லை.

அங்கீகாரம்

நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் குரல் எழுப்பிய அபுபக்கர்

அகில இந்திய சன்னி ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளரான அபுபக்கருக்கு அகில இந்திய தன்சீம் உலமா-இ-இஸ்லாமினால் 'கிராண்ட் முஃப்தி ஆஃப் இந்தியா' என்ற பட்டம் வழங்கப்பட்டது. அபுபக்கர், தனது சொந்த ஊரில் உள்ள ஒரு தனியார் ஒருங்கிணைந்த டவுன்ஷிப்பான மர்காஸ் அறிவு நகர திட்டத்தின் தலைவராக உள்ளார். அபுபக்கர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்ததனால் செய்திகளில் இடம்பிடித்தவர். அதேபோல, குடியுரிமைக்கான தகுதி அளவுகோல்களின் பட்டியலிலிருந்து மதத்தை நீக்க, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் திருத்தம் செய்யுமாறு வலியுறுத்தினார். மறுபுறம், ராம ஜென்மபூமி பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சமூகம் வரவேற்க வேண்டும் என்றும், மதத்தை விட நாட்டின் இறையாண்மையை முக்கியம் எனவும் அபுபக்கர் வேண்டுகோள் விடுத்தவர்.

நிமிஷா பிரியா

நிமிஷா பிரியாவின் மரணதண்டனையை தள்ளிப்போடுவதில் பங்கு

நிமிஷா ப்ரியாவின் தண்டனை விவகாரத்தில் இரத்தப் பணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும், கேரளாவில் உள்ள சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விவரங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. அபுபக்கர் தனது நீண்டகால நண்பரும் ஏமன் நாட்டின் சூஃபி இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸ் மூலம் ஒரு புதிய மத்தியஸ்த முயற்சியைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. "இஸ்லாத்தில் இன்னொரு சட்டம் உள்ளது. கொலைகாரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு மன்னிப்பு கேட்க உரிமை உண்டு. இந்தக் குடும்பம் யார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் வெகு தொலைவில் இருந்து, ஏமனில் உள்ள பொறுப்பான அறிஞர்களைத் தொடர்பு கொண்டேன் ," என்று அவர் செய்தி நிறுவனமான ANI இடம் கூறினார்.

பேச்சு வார்த்தை

அபுபக்கர் நடத்திய பேச்சுவார்த்தை 

"நான் அவர்களுக்கு பிரச்சினைகளைப் புரிய வைத்தேன். இஸ்லாம் மனிதகுலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு மதம்," என்று அவர் மேலும் கூறினார். "நான் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்ட பிறகு , (ஏமனில் உள்ள) அறிஞர்கள் சந்தித்து, விவாதித்து, தங்களால் இயன்றதைச் செய்வதாகக் கூறினர். அவர்கள் அதிகாரப்பூர்வமாக எங்களுக்குத் தெரிவித்து, மரணதண்டனை தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் ஆவணத்தை அனுப்பியுள்ளனர், இது நடந்துகொண்டிருக்கும் விவாதங்களை எளிதாக்க உதவும்," என்று அவர் கூறினார். இதற்கிடையில், பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்காக இங்குள்ள முஸ்லியாரின் தலைமையகத்தில் ஒரு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.