Page Loader
பானிபூரி விற்பனையாளர் ₹40 லட்சம் வருமானம் ஈட்டினாரா? வைரலான ஜிஎஸ்டி நோட்டீஸ் உண்மையானதல்ல
பானிபூரி விற்பனையாளர் Rs.40 லட்சம் வருமானம் ஈட்டினாரா?

பானிபூரி விற்பனையாளர் ₹40 லட்சம் வருமானம் ஈட்டினாரா? வைரலான ஜிஎஸ்டி நோட்டீஸ் உண்மையானதல்ல

எழுதியவர் Sekar Chinnappan
Jan 05, 2025
05:09 pm

செய்தி முன்னோட்டம்

2023-24 நிதியாண்டில் ₹40 லட்சம் வருமானம் ஈட்டியதாகக் கூறி, தமிழ்நாடு பானிபூரி விற்பனையாளர் ஒருவருக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தைத் தூண்டியது. இருப்பினும், அந்த நோட்டீஸ் உண்மையில் ஒரு ஹோட்டல் விற்பனையாளருக்கு வழங்கப்பட்டது என்றும் அதில் முகவரியை மாற்றி போலியாக சித்தரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. நகைச்சுவை நடிகர் ஜகதீஷ் சதுர்வேதியின் ட்வீட்டைத் தொடர்ந்து இந்த ஜிஎஸ்டி நோட்டீஸ் வைரலானது. இது குறித்து இந்தியா டுடேவில் வெளியாகியுள்ள ஒரு அறிக்கையில், இது நகைச்சுவைக்காக முகவரியை கையால் மாற்றி வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிய வந்துள்ளது.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி வரி வரம்பு 

ஆண்டு வருமானம் ₹40 லட்சத்திற்கு மேல் உள்ள வணிகங்கள் ஜிஎஸ்டி விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். அதன்படி ஒரு ஹோட்டல் விற்பனையாளரை ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யும்படி அறிவுறுத்தி இந்த நோட்டீஸ் உண்மையில் வெளியிடப்பட்டது என அதில் தமிழ்நாடு ஜிஎஸ்டி துறை விளக்கம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்டம் மற்றும் மத்திய ஜிஎஸ்டி சட்டத்தின் 70வது பிரிவின் கீழ் விற்பனையாளருக்கு டிசம்பர் 17 அன்று சம்மன் அனுப்பப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கான நிதிப் பதிவுகளைக் கோரியது. அந்த அறிக்கையில், அதன் முதன்மை நோக்கம் விற்பனையாளருக்கு ஜிஎஸ்டி பதிவுச் சான்றிதழைப் பெறுவதற்கு வழிகாட்டுவதாகும் என்றும் அதை விற்பனையாளர் ஒப்புக்கொண்டார் என்றும் அதிகாரிகள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.