400 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்தியாவின் மிகப்பெரும் மீட்பு பணி எப்படி சாத்தியமானது?
கடந்த நவம்பர் 12ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அந்த சமயத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் அந்த சுரங்கப்பாதைக்குள்ளேயே சிக்கி கொண்டனர். அப்போதிலிருந்து 17 நாட்களாக தொடர்ந்து அவர்களை மீட்க மீட்பு பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
652 அரசு ஊழியர்களின் அயராத உழைப்பு
17 நாட்கள், அதாவது 400 மணி நேரம் நீடித்த இந்தியாவின் மிகப்பெரும் மீட்புப் பணியில் குறைந்தது 652 அரசு ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அதில் காவல் துறையைச் சேர்ந்த 189 பேர், சுகாதாரத் துறையைச் சேர்ந்த 106 பேர், இந்தோ திபெத்திய எல்லைக் காவல் துறையைச் சேர்ந்த 77 பேர், தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 62 பேர், மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 39 பேர், ஜல் சன்ஸ்தான் உத்தர்காஷியை சேர்ந்த 46 பேர், மின்சாரத் துறையைச் சேர்ந்த 32 பேர் மற்றும் எல்லைச் சாலைகள் அமைப்பை சேர்ந்த 38 பேர் ஆகியோர் அடங்குவர். அதுபோக, கடைசி நாளான நேற்று 24 எலி சுரங்கத் தொழிலாளர்களும் மீட்பு பணியில் இணைந்தனர்.
எதிர்பார்புகளை மிஞ்சிய எலி சுரங்கத் தொழிலாளர்களின் சேவை
16 நாட்கள் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வந்த போதிலும், ட்ரில்லிங் இயந்திரங்களால் போடப்பட்ட துளைகள் தொடர்ந்து இடிந்து விழுந்ததால், சிக்கியிருந்த தொழிலாளர்களை காப்பாற்ற இன்னும் பல நாட்கள் ஆகலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், 16வது நாள் மீட்பு பணியில் சேர்ந்த எலி சுரங்கத் தொழிலாளர்கள் 24 மணிநேரத்திற்குள் 12மீ துளையை வேகமாக தோண்டி மீட்பு பணியை வெற்றிகரமாக முடித்தனர். இது குறித்து பேசி இருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல்(ஓய்வு) சையத் அட்டா ஹஸ்னைன், "அவர்கள் 18/20 மணிநேரத்தில் இரண்டு-மூன்று மீட்டர்கள் என்ற விகிதத்தில் முன்னேறுவார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர்கள் 18 மணிநேரத்திற்குள் 10மீ குழியை தோண்டி எங்கள் எதிர்பார்புகளை மிஞ்சியுள்ளனர்." என்று கூறியுள்ளார்.
தொழிலாளர்கள் மீட்கப்படும் காட்சி
மீட்பு பணி 400 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையின் மீட்புப் பணி முடிவடைய 400 மணிநேரம் ஆனது. அதுவரை, அங்கு சிக்கியிருந்த தொழிலாளர்களுக்கு ஒரு குழாயின் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டன. கடந்த சனிக்கிழமை, 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத உபகரணம் பழுதாகி உடைந்துவிட்டது. சில்க்யாரா சுரங்கப்பாதையின் இடிபாடுகளுக்குள் துளையிட்டுக் கொண்டிருந்தபோது, அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆஜர் இயந்திரத்தின் பிளேடுகள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டன. அதனை தொடர்ந்து தான், எலி துளை தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸும் இந்த மீட்பு பணியில் உதவுவதற்காக வரவழைக்கப்பட்டார். அதனால் இந்த சம்பவம் சர்வதேச அளவில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.