சீஹெஞ்ச் ரகசியம் உடைந்தது: முடிவில்லாத கடும் குளிர்காலத்தை நிறுத்த கட்டப்பட்ட 4,000 ஆண்டுகள் பழமையான வெண்கலக் கால மரவட்டம்
செய்தி முன்னோட்டம்
பிரிட்டனின் நோர்ஃபோல்க் கடற்கரையில் கண்டறியப்பட்ட சீஹெஞ்ச் எனப்படும் மர்மமான மரவட்டம், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நிலவிய கடுமையான குளிர்காலத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சடங்குகளின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டிருக்கலாம் என்று புதிய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அபெர்டீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் நான்ஸ் நடத்திய இந்த புதிய ஆய்வு, ஜியோஜர்னல் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களால் சீஹெஞ்ச் என்று அழைக்கப்படும் ஹோல்ம் 1 மற்றும் அதன் அருகில் உள்ள ஹோல்ம் 2 ஆகிய இரண்டு தளங்களின் பின்னணி குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
4,000 ஆண்டுகள்
4,000 ஆண்டுகள் பழமையான சீஹெஞ்ச் கட்டமைப்பு
சுமார் கிமு 2049 ஆம் ஆண்டில், அதாவது வெண்கலக் காலத்தில் கட்டப்பட்ட இந்த இரண்டு நினைவுச் சின்னங்களும், பல நூற்றாண்டுகளாக கடற்கரை மணலுக்குள் புதைந்து கிடந்து, பின்னர் கடந்த 1998 ஆம் ஆண்டில் தான் வெளியே தெரிந்தன. இதில் சீஹெஞ்ச் தளம் என்பது நடுவில் தலைகீழாக நடப்பட்ட ஒரு மரக்குற்றியைச் சுற்றி, 55 ஓக் மரத்தூண்கள் மிக நெருக்கமாக அடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது துவக்கத்தில் கடல் அலைகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு சதுப்பு நிலப் பகுதியில் கட்டப்பட்டு, பின்னர் பல ஆண்டுகள் கரிநில அடுக்குக்கு அடியில் பாதுகாப்பாக புதைந்திருந்தது.
விசித்திர சடங்கு
கோடைகாலத்தை சிறைபிடிக்க நினைத்த விசித்திர சடங்கு
இதற்கு முன்பு இருந்த கோட்பாடுகள், இந்த இடம் மரண சடங்குகளுக்காக அல்லது இறந்த உடல்களைப் பறவைகள் உண்பதற்காக வைக்கும் வானப் புதைப்பு முறைக்காகப் பயன்படுத்தப்பட்டது என்று கூறின. ஆனால், டாக்டர் நான்ஸ் தனது ஆய்வில், இந்த மரங்கள் அனைத்தும் வசந்த காலத்தில் வெட்டப்பட்டு, கோடைகால சங்கராந்தியின் சூரிய உதய நேர்க்கோட்டில் சீரமைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த காலகட்டத்தில் பிரிட்டனில் வெப்பநிலை கடுமையாகக் குறைந்து வந்ததால், செழிப்பின் அடையாளமான குயில் பறவையை சிறைபிடித்து, அது கோடைகாலத்தை எடுத்து செல்லாமல் தடுக்கும் ஒரு நாட்டுப்புற கதையின் அடிப்படையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் நம்புகிறார்.
பலி சடங்குகள்
சமநிலையை மீட்டெடுக்க நடத்தப்பட்ட பலி சடங்குகள்
அதே நேரத்தில், ஹோல்ம் 2 தளத்தைப் பற்றி விளக்கும் டாக்டர் நான்ஸ், இரும்புக்கால பிரிட்டன் மற்றும் அயர்லாந்து வரலாற்றில் சமூகத்திற்கு ஏதேனும் ஆபத்து நேரிடும் போது அங்கிருந்த புனித அரசர்கள் பலியிடப்பட்ட பழைய கதைகளை சுட்டிக்காட்டுகிறார். அதன்படி, ஹோல்ம்-நெக்ஸ்ட்-தி-சீ பகுதியில் வாழ்ந்த மக்கள், வீனஸ் (வெள்ளி) கிரகம் தோன்றுவதைக் கணக்கிட்டு, ஒவ்வொரு 8 ஆண்டுகளுக்கும் ஒருமுறை சாம்ஹைன் பண்டிகையின் போது இத்தகைய சடங்கு பலிகளை நடத்தியிருக்கலாம் என்று கூறுகிறார். இந்த இரண்டு நினைவுச் சின்னங்களும் வெவ்வேறு நோக்கங்களுக்காகக் கட்டப்பட்டிருந்தாலும், இவை இரண்டுமே வெண்கலக் கால பிரிட்டனை உலுக்கிய கடுமையான குளிரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரே குறிக்கோளோடுதான் கட்டப்பட்டுள்ளன.