வன்முறைக்கு பணிந்த UP அரசு; நொய்டா தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து, உத்தரப் பிரதேச அரசு நள்ளிரவில் அதிரடியான ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கான அரசாணையை அரசு பிறப்பித்துள்ளது. அரசின் புதிய அறிவிப்பின்படி, நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் உள்ள திறன் சாரா தொழிலாளர்களின் (Unskilled workers) மாத ஊதியம் ₹11,313-லிருந்து ₹13,690 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விகிதங்கள்
புதிய ஊதிய விகிதங்கள்
இதேபோல், பகுதித் திறன் கொண்ட (Semi-skilled) மற்றும் முழுத் திறன் கொண்ட (Skilled) தொழிலாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. மாநிலத்தின் பிற மாநகராட்சிகள் மற்றும் மாவட்டங்களிலும் பல்வேறு நிலைகளில் ஊதிய உயர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டம்
வன்முறையாக மாறிய போராட்டம்
நொய்டாவின் ஃபேஸ்-2 பகுதியில் திங்கள்கிழமை மதியம் நடைபெற்ற போராட்டம் கட்டுக்கடங்காமல் வன்முறையாக மாறியது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு ஊதிய உயர்வு கோரி முழக்கமிட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கும்பல், காவல்துறையினரின் வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்குத் தீ வைத்தது. கற்கள் வீசப்பட்டதில் காவல்துறை வாகனங்கள் சேதமடைந்தன. நிலைமையை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டு, போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர். மாலை 5 மணிக்கு பிறகு நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல்துறை குற்றச்சாட்டு
வெளியாட்கள் ஊடுருவல்: காவல்துறை குற்றச்சாட்டு
இந்தப் போராட்டத்தின் பின்னணியில் "வெளியாட்களின்" சதி இருப்பதாக காவல்துறை சந்தேகம் எழுப்பியுள்ளது. கௌதம் புத் நகர் காவல்துறை ஆணையர் லட்சுமி சிங் கூறுகையில், "ஆரம்பத்தில் அமைதியாகத் தொடங்கிய போராட்டத்தைத் திசைதிருப்ப, மாவட்டத்திற்கு வெளியிலிருந்து வந்த ஒரு கும்பல் வன்முறையைத் தூண்டியது" எனத் தெரிவித்துள்ளார். எல்லையோர பகுதிகள் வழியாக ஊடுருவிய இந்தக் கும்பலைச் சேர்ந்த சிலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வீடியோ ஆதாரங்களை கொண்டு வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வன்முறை தொடர்பாக இதுவரை ஏழு FIR பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோத சக்திகள் பலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்