நொய்டாவில் போர்க்களமான சாலைகள்! தொழிலாளர்கள் போராட்டத்தில் வன்முறை
செய்தி முன்னோட்டம்
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம், திங்களன்று பெரும் வன்முறையாக உருவெடுத்தது. பல நாட்களாக அமைதியாக நடைபெற்று வந்த இந்த அறப்போராட்டம், காவல்துறை நடவடிக்கைக்குப் பிறகு கட்டுப்பாட்டை மீறிச் சென்றது, அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் கடந்த ஐந்து நாட்களாக தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். திங்களன்று தடியடி நடத்திய காவல்துறையினர், பெண் ஊழியர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் வாகனங்கள் மற்றும் அரசு வாகனங்களுக்குத் தீ வைத்தனர். மேலும், போலீசார் மீது சரமாரியாகக் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | Protests by factory workers turned violent in parts of Noida on Monday, with several vehicles also being burnt.
— Hindustan Times (@htTweets) April 13, 2026
Stay updated with all the stories that matter — download the Hindustan Times app
(🎥: Sunil Ghosh/HT) pic.twitter.com/HPNOdWEBZg
பின்னணி
ஊதிய உயர்வு கோரிக்கையும் பின்னணியும்
தொழிலாளர் சட்டங்களின்படி தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதே இவர்களின் முதன்மை கோரிக்கையாக உள்ளது. போராட்டக் களத்தில் இருந்த பெண் தொழிலாளி ஒருவர் கூறுகையில், "அரசாங்கம் எங்கள் ஊதியத்தை ₹20,000 ஆக உயர்த்துவதாக உறுதியளித்தது, ஆனால் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நியாயமான கோரிக்கையை வலியுறுத்தும் பெண்கள் மீது தடியடி நடத்துவது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். ஏற்கனவே கடந்த ஏப்ரல் 10-ம் தேதியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு இதேபோன்ற போராட்டத்தை முன்னெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து முடக்கம்
டெல்லி-நொய்டா எல்லையில் போக்குவரத்து முடக்கம்
இந்த வன்முறை போராட்டத்தின் விளைவாக டெல்லி மற்றும் நொய்டாவை இணைக்கும் எல்லைச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் பல மணிநேரம் சாலையில் தேங்கி நின்றதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அமைதியை நிலைநாட்ட ஒத்துழைக்குமாறும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நொய்டாவில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, டெல்லி காவல்துறை எல்லைப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. உத்தரப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்குள் நுழையும் அனைத்து முக்கிய சாலைகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.