2 கோடி உறுப்பினர்கள் இலக்கு: த.வெ.க அதிரடி உத்தரவு
தளபதி விஜய் தனது தமிழக வெற்றி கழகத்திற்காக உறுப்பினர்களை சேர்க்கும் பணியை முடுக்கி விட்டுள்ளார். இது குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட உறுதிமொழி அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில்,"இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும், நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை சகோதரத்துவம் மத நல்லிணக்கம் சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன். மக்களாட்சி மதசார்பின்மை சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராக கடமையாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்...பிறப்பெங்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உட்கட்சி கட்டமைப்பு பற்றி விவாதம்
இது குறித்து விஜய் ரசிகர் மன்ற தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளருமான புஸ்ஸி ஆனந்த்,"தலைவரின் ஆணைப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும். நமது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களால் விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர்." "தலைவரின் ஆணையை ஏற்று, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும்" என அவரது அறிக்கை தெரிவிக்கிறது.