தமிழில் கையொப்பம் இடுவது கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
மாநில அரசு அலுவலங்கங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், தமிழில் தான் கையெழுத்திட வேண்டும் என்பது கட்டாயம். அதற்கான தமிழக அரசின் அரசாணை சென்ற 2021ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, அதே அரசாணையை மேற்கோள் காட்டி, தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, "பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி அனைத்து இடங்களிலும் தங்களின் பெயர்களை எழுதும் போதும், கையெழுத்திடும் போதும் கண்டிப்பாகத் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று மீண்டும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது".
பள்ளி மாணவர்களும் தமிழில் கையெழுத்திட வேண்டும்
தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சார்பில் அனுப்பட்ட இந்த சுற்றறிக்கை, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் (DPI) பணியாற்றி வரும் அனைத்து இயக்குநர்கள், சென்னை பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர்கள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, DPI வளாகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தொடங்கி, கடைநிலை அலுவலகம் வரை அனைத்து இடங்களிலும் பெயரையும், கையொப்பத்தையும் தமிழிலேயே இட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களையும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என அறிவுறுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.