Page Loader
ஜெருசலம் பயணத்தை தவிர்க்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்
இஸ்ரேலில் உள்ள 30 தமிழர்களும் நலமாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஜெருசலம் பயணத்தை தவிர்க்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்

எழுதியவர் Srinath r
Oct 08, 2023
05:13 pm

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேல் பாலஸ்தீனியம் இடையே நடைபெற்று வரும் போரால், ஜெருசலம் புனித பயணத்தை தவிர்க்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது. பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் நேற்று 5,000 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி அல்-அக்ஸா பிளட்(Operation Al-Aqsa Flood) என்ற ஆபரேஷனை தொடங்கியது. கடந்த 36 மணி நேரத்திற்கு மேலாக தொடரும் போரில் இரு தரப்பிலும் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் போர் நடைபெற்று வருவதால், கிறிஸ்தவர்கள் ஜெருசீலத்திற்கு புனித பயணம் மேற்கொள்வது பாதுகாப்பாக இருக்காது எனவும் அமைதி திரும்பும் வரை ஜெருசலம் பயணத்தை தவிர்க்கவும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

2nd card

இஸ்ரேலில் நலமாக உள்ள 30 தமிழர்கள்

முன்னதாக இஸ்ரேலில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு, தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்திருந்தது. மேலும் தற்போது இஸ்ரேலில் உள்ள 30 தமிழர்களிடம் பேசியதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் அரசு தற்போது மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனக் கூறியுள்ளதால், அங்கு பதற்றம் சற்று தணிந்த பின் தமிழர்கள் மீட்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் போர் நடைபெற்று வரும் இஸ்ரேலில் 18,000 இந்தியர்கள் வரை இருக்கலாம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.