Page Loader
செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து கருதி அவரை காவலில் எடுக்கவில்லை - அமலாக்கத்துறை 
செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து கருதி அவரை காவலில் எடுக்கவில்லை - அமலாக்கத்துறை

செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து கருதி அவரை காவலில் எடுக்கவில்லை - அமலாக்கத்துறை 

எழுதியவர் Nivetha P
Jun 20, 2023
12:37 pm

செய்தி முன்னோட்டம்

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யவேண்டுமென மருத்துவர்கள் கூறிய நிலையில், அமைச்சரின் மனைவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற அனுமதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இதற்கு நீதிமன்றமும் ஒப்புதல் அளித்ததையடுத்து, ஜூன் 15ம்தேதி இரவு செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனிடையே அவரை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியதற்கு சென்னை செசன்ஸ் நீதிமன்றம் ஜூன் 16ம்தேதி அனுமதியளித்து உத்தரவிட்டது. மேலும் அவரது உடல்நிலையினை கருத்தில் கொண்டு அவரது சிகிச்சைக்கு இடையூறு அளிக்காமல் விசாரணையினை மேற்கொள்ளவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

அமலாக்கத்துறை

இதுவரை அமைச்சரை காவலில் எடுக்கவில்லை என்று விளக்கம் 

இதன் காரணமாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியினை விசாரிக்க முடியாத சூழல் தற்போது நிலவுகிறது. இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியான அல்லி முன்னர் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ், "காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையினை கருத்தில் கொண்டு அவரை இதுவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்கவில்லை" என்று தகவல் அளித்துள்ளார். இதனிடையே செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையளிக்க அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து அமலாக்கத்துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள வழக்கானது நாளை(ஜூன்.,21) விசாரிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.