வளிமண்டல சுழற்சி மெல்ல அரபிக்கடல் பக்கம் நகர்கிறது - தமிழ்நாடு வெதர்மேன்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களை கனமழை புரட்டி போட்டது. குறிப்பாக காயல்பட்டினத்தில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்தது. 95செ.மீ.,மழை பதிவு என்பது கனவிலும் நினைத்து பார்க்காத மழை பொழிவு. இத்தகைய கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து ரெட் அலெர்ட் கொடுத்தது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. மழை பாதிப்பால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பொது விடுமுறை இன்றும்(டிச.,19) அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வறண்ட வானிலை நிலவும் என்று தகவல்
மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ரெட் அலெர்ட் தெரிவிக்கப்பட்டிருந்த பட்சத்தில் இன்று கனமழையானது ஓரளவு குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் மழை குறித்த ஓர் பதிவினை செய்துள்ளார். அதில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகனமழைக்கு காரணமாக இருந்த வளிமண்டல சுழற்சி தற்போது மெல்ல அரபிக் கடல் நோக்கி நகர துவங்கியுள்ளது. இதன் காரணமாக மழை பொழிவு சற்று குறைந்துள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளை தீவிரப்படுத்துவது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், 'ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று லேசான மழை வாய்ப்புள்ளது' என்றும், 'சென்னையில் வறண்ட வானிலை நிலவும்' என்றும் பதிவிட்டுள்ளார்.