விடுதலையாகிறார் செந்தில் பாலாஜி; ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அப்போது தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமாகி அறுவை சிகிச்சை செய்த நிலையிலும், அவர் தொடர்ந்து சிறையிலேயே வைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தாலும், அவை தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டே வந்தன. இந்நிலையில், தொடர் போராட்டத்திற்கு பிறகு, உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு இன்று (செப்டம்பர் 26) ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவு
செந்தில் பாலாஜியின் ஜாமீன் குறித்து வழக்கறிஞர் பேட்டி
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களாக விசாரணை குற்றவாளியாக சிறையில் இருப்பதால், அவரது அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் அவர் முறையான ஒத்துழைப்பு தரவேண்டும். ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து இன்று மாலை அல்லது நாளை காலை அவர் சிறையில் இருந்து வெளியே வருவார்." எனத் தெரிவித்துள்ளார்.