
11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு
செய்தி முன்னோட்டம்
அரசியல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மூத்த சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இதன் மூலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அழகிரியின் வீட்டிற்கு ஸ்டாலின் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை சென்ற ஸ்டாலின், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீண்ட சாலை பேரணியில் கலந்துகொண்ட பிறகு இந்த சந்திப்பு நடந்துள்ளது.
முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகளிடம் உற்சாக வரவேற்பைப் பெற்ற ஸ்டாலின், பின்னர், மாலை 5:30 மணிக்கு பெருங்குடியில் இருந்து ஒரு பிரமாண்டமான சாலைப் பேரணியைத் தொடங்கினார்.
உற்சாகம்
சாலை பேரணியில் பொதுமக்களுடன் உற்சாகமாக கலந்துரையாடிய ஸ்டாலின்
அவனியாபுரம் பைபாஸ், வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம் மற்றும் மஜுரா கோட்ஸ் பாலம் உள்ளிட்ட முக்கிய நகரப் பகுதிகளைக் கடந்து சென்ற சாலை பேரணியில் முதலமைச்சர் ஸ்டாலின் உற்சாகமான கூட்டத்தினருடன் கலந்துரையாடினார்.
பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார், மேலும் பெரியார், பாரதியார் போன்ற முக்கிய தமிழ் சின்னங்களாக உடையணிந்த குழந்தைகள் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியை சித்தரிக்கும் ஒரு சிறுவன் அவரை வரவேற்றனர்.
ஜெய்ஹிந்த்புரத்தில், வீரகாளியம்மன் கோவிலில் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிதாக கட்டப்பட்ட கூரையை ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வழியில், பிரபல சொற்பொழிவாளர் சாலமன் பாப்பையாவுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், மதுரையின் முதல் மேயரான எஸ்.முத்துவின் வெண்கலச் சிலையையும் சிறந்து வைத்தார்.
செங்கோல்
செங்கோல் வழங்கி கௌரவிப்பு
சாலைப் பேரணி முடிந்த பிறகு, டிவிஎஸ் நகரில் உள்ள அழகிரியின் இல்லத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சம்பிரதாயபூர்வமாக வரவேற்பு அளிக்கப்பட்டு, ஒரு செங்கோல் வழங்கப்பட்டது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவெளியில் நேருக்கு நேர் சந்திப்பதை இருவரும் தவிர்த்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், முக்கியமான 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இருவரும் வெளிப்படையாக சந்தித்துள்ளதால், திமுகவில் மீண்டும் அழகிரி செயல்பட உள்ளாரா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.