
மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த கடற்கொள்ளையர்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு, நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள வானவன் மகாதேவி மீனவர்கள் தெருவினை சேர்ந்த சுப்ரமணியம்(50), என்பவருக்கு சொந்தமாக ஓர் ஃபைபர் படகு உள்ளது.
அதில், அவரோடு நேற்று முன்தினம் மதியம் அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி(55), முருகேசன்(41), ராஜகோபால்(62), மகாலிங்கம்(60) உள்ளிட்ட 5 பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றதாக தெரிகிறது.
அதன்படி கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில், 11 நாட்டிக்கல் மைல் தூரத்தில் அவர்கள் அன்று இரவு மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர்.
மீனவர்கள்
அதிவேக படகில் வந்த கடற்கொள்ளையர்கள்
அப்போது அவர்கள் படகு அருகே அதிவேகமாக ஓர் படகு வந்துள்ளது.
அதில் வந்த 4 இலங்கை கடற்கொள்ளையர்கள், இவர்களின் படகில் ஏறி இரும்புக்கம்பிகள், கட்டைகள் கொண்டு படகிலிருந்த 5 பேரையும் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
மேலும் அப்படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, 600 கிலோ எடைகொண்ட வலைகள், பிடித்து வைங்கப்பட்டிருந்த மீன்கள், 2 சிக்னல் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.
2 படகு
மற்றொரு படகையும் சூறையாடிய இலங்கை கடற்கொள்ளையர்கள்
அதேபோல, அதே பகுதியினை சேர்ந்த முருகா(36) என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் செல்வம்(35), சண்முகவேல்(35), சுப்பிரமணியம்(37) உள்ளிட்ட 4 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு கோடியக்கரைக்கு அருகே மீன் பிடித்து கொண்டிருந்துள்ளனர்.
அவர்களையும், இதே இலங்கை கடற்கரை கொள்ளையர்கள் தாக்கி, படகிலிருந்த 40 கிலோ மீன், வெள்ளி அரைஞாண் கயிறு, வெள்ளி-தங்கச்சங்கிலிகள், 150 கிலோ எடைகொண்ட வலைகள், பேட்டரி செல்போன், வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வேதனை
பொருட்களை பறிகொடுத்த வேதனையில் வேதாரண்ய மீனவர்கள்
அதனை தொடர்ந்து பொருட்களை பறிகொடுத்த வேதனையோடு, முருகானந்தம் உள்ளிட்ட 4 மீனவர்களும் தங்கள் படகில் கரைக்கு திரும்பி கொண்டிருந்தபோது, பாதி வழியில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த சுப்ரமணியம் உள்ளிட்ட 5 மீனவர்களையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவர்களை மீட்டதோடு, கடலில் சிறிது தூரத்தில் மிதந்து கொண்டிருந்த, சுப்ரமணியத்திற்கு சொந்தமான படகையும் கண்டுபிடித்துள்ளனர்.
அதன் பின்னர், 2 படகுகளில் 9 மீனவர்களும் நேற்று(அக்.,18)காலை கரைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
சிகிச்சை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை
தற்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் 9 பேரும், நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 23, 25 மற்றும் இம்மாதம் 6ம் தேதி வெள்ளப்பள்ளம், செருதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்களை இதேபோல் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி கொள்ளையடித்து சென்றனர்.
தற்போது, மீண்டும் இத்தகைய கொள்ளை சம்பவம் நடந்திருப்பது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 2 படகிலும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.