சூரசம்ஹாரம் 2023: திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டியின் போது, சூரசம்ஹாரம் என்ற திருவிழா தமிழகம் முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதிலும், முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது வீடான திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தின் போது ஒவ்வொரு வருடமும் ஒரு பெரும் பக்தர்கள் கூட்டம் கூடுவது வழக்கம். இந்த வருட கந்தசஷ்டி கடந்த 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூரில் தொடங்கியது. அப்போதிலிருந்து பக்தர்கள் தொடர்ந்து கந்தசஷ்டி விரதத்தில் ஈடுபட்டுள்ளனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று காலை 1 மணிக்கெல்லாம் திருச்செந்தூரில் பூஜைகள் தொடங்கின. இன்று மாலை 4 மணிக்கு சூரனை வதம் செய்ய சுப்பிரமணிய சுவாமி கடற்கரையில் எழுந்தருளினார். இதனையடுத்து, முருகன், ஒளவை, சிவன், சக்தி போன்று வேடமிட்ட பலர் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போது திருச்செந்தூரில் திரண்டுள்ளனர்.