ஐந்தாண்டுகளுக்கு பின் தமிழகம் வந்த சோனியா காந்தி- முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு
சென்னையில் இன்று நடைபெறும் திமுக மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த மாநாட்டிற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க 5 வருடங்களுக்குப் பின் நேற்று தமிழ்நாடு வந்த சோனியா காந்தியை, முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர். முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு, எம்பி மற்றும் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி முன்னிலை வகிக்கிறார். இன்று மாலை 5 மணிக்கு இந்த மாநாடு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
'இந்தியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் முக்கிய பெண் தலைவர்களுக்கு அழைப்பு
திமுக மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்க, 'இந்தியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல முக்கிய பெண் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, ஐக்கிய ஜனதா தள நிர்வாக குழு உறுப்பினர் லெஷிசிங், தேசியவாத காங்கிரஸின் செயல் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் பங்கேற்று பேசுகிறார்கள். இறுதியில் எம்பியும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி விழா பேருரையாற்றுகிறார். 'இந்தியா' கூட்டணி அமைக்கப்பட்டது முதல் பொதுக்கூட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதால், இன்று நடைபெறும் மாநாடு பொதுக்கூட்டமாகவே பார்க்கப்படும். மேலும் சோனியா காந்தி 'இந்தியா' கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.