Loading...
சிக்கிம் தீஸ்டா அணை சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெடிப்பு: 7 தொழிலாளர்கள் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு
சிக்கிம் தீஸ்டா அணை சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெடிப்பு

சிக்கிம் தீஸ்டா அணை சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெடிப்பு: 7 தொழிலாளர்கள் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 21, 2026
08:04 am

செய்தி முன்னோட்டம்

சிக்கிம் மாநிலம் நமச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய நீர்மின் கழகத்தின் தீஸ்டா ஸ்டேஜ்-VI நீர்மின் திட்டப் பணிகளின் போது, கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதைக்குள் ஏற்பட்ட மீத்தேன் வாயு வெடிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 தொழிலாளர்கள் சுரங்கத்தின் ஆழமான பகுதிக்குள் சிக்கித் தவித்து வருகின்றனர். நேற்று மாலை 3:40 மணியளவில் நடந்த இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டாம் நாளாக அங்கே தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநிலப் படைகள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

விபத்து

விபத்து நடந்தது எப்படி?

சுரங்கப்பாதையின் உட்பகுதியில் சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் அபாயகரமான மீத்தேன் வாயு பெருமளவில் தேங்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேங்கியிருந்த மீத்தேன் வாயுவை வெளியேற்ற முயற்சி செய்தபோது, எதிர்பாராதவிதமாக அங்கு பயங்கர வெடிப்பு ஏற்பட்டது.

இந்த வெடிப்பின் அழுத்தத்தால் சுரங்கப்பாதையின் உட்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு, தொழிலாளர்கள் வெளியேறும் பிரதான பாதை முற்றிலும் பாறைகளாலும் பாறைக் கழிவுகளாலும் மூடப்பட்டது.

விபத்தின் போது 25 தொழிலாளர்கள் உள்ளே இருந்த நிலையில், இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

எஞ்சிய 18 தொழிலாளர்களை மீட்கப் போராட்டங்கள் தொடர்கின்றன.

சவால்கள்

மீட்புப் படைகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள்

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த ரங்போ தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் முதற்கட்ட மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், சுரங்கத்திற்குள் ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருந்ததாலும், நச்சு மீத்தேன் வாயு பரவியிருந்ததாலும் மீட்புப் படையினருக்கே மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதில் பல மீட்புப் படை வீரர்கள் திடீரென மயக்கமடைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டதால் முதற்கட்டப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன

அபாயகரமான வாயு சூழ்ந்துள்ளதால், ஆக்சிஜன் சுவாசக் கருவிகள் மற்றும் நச்சு வாயு பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய சிறப்பு மீட்புக் குழுவினர் மேற்கு வங்காளத்தில் இருந்தும், சிலிகுரி மற்றும் பாக்யோங் பகுதியிலிருந்தும் அவசரமாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சுரங்கத்தின் குறுகிய பாதை மற்றும் புகை மூட்டம் காரணமாக மீட்புப் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT