ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தெரிவித்த அதிரடி கருத்து
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் மாசும், மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறி, அதனை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி 2018ஆம் ஆண்டு அப்பகுதி மக்கள் கடும் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் 100வது நாள் அன்று, காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி உத்தரவிட்டது. தமிழக அரசு ஆணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஸ்டெர்லைட் ஆலை
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,"ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயங்க அனுமதித்தால் சுகாதார பிரச்னைகள் தொடர் கதையாகிவிடும். ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து காற்று மாசுவை ஏற்படுத்தி, விதிகளை மீறி வருகிறது". "நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் வேதாந்தா நிறுவனம் மேற்கொள்ளவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை இயங்க அனுமதிக்கக் கூடாது"என்று வாதிட்டார். வாதங்களைக் கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி,"தூத்துக்குடி பகுதி மக்களின் ஆரோக்கியம், நலன் பாதுகாக்கப்பட வேண்டும். சாமானியர்கள் நேரடியாக நீதிமன்றம் வர இயலாது என்பதால் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தவறு என்று கூற முடியாது. ஆகவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்தார்.