Page Loader
தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது எஸ்பிஐ

தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது எஸ்பிஐ

எழுதியவர் Sindhuja SM
Mar 12, 2024
07:03 pm

செய்தி முன்னோட்டம்

உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுக்கு இணங்க, பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) இன்று மாலை தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. நீதிமன்ற உத்தரவுப்படி வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் இந்த தரவுகளை தனது இணைத்தளத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எஸ்பிஐ வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தும் பிரமாணப் பத்திரத்தை இதுவரை தாக்கல் செய்யவில்லை. பிரமாணப் பத்திரம், தயாராக உள்ளது, ஆனால் இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது.

இந்தியா 

தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு நடந்த சம்பவங்கள் 

இந்த பத்திரங்களை வழங்குவதை நிறுத்தவும், இந்த முறையில் அளிக்கப்பட்ட நன்கொடைகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6 ஆம் தேதிக்குள் தெரிவிக்கவும் அப்போது எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதால் அந்த சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், இந்த விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கி, வரும் ஜூன் மாதம் வரை அவகாசம் கோரி இருந்தது. இந்நிலையில், எஸ்பிஐயின் இந்த கோரிக்கையை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், "அந்த விவரங்களை நாளைக்குள்(மார்ச் 12) இந்திய தேர்தல் ஆணையத்திடம்(இசிஐ) பகிர்ந்து கொள்ள வேண்டும்" என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு இணங்க, தற்போது தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.