'தேச விரோத செயலில் சபை ஈடுபட்டது': கேரள தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்
கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி பகுதியில் இன்று காலை நடந்த ஒரு கிறிஸ்தவ குழுவின் வழிபாட்டு கூட்டத்தில் திடீரென்று 3 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்புகளால் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். 45 பேர் காயம் அடைந்தனர். அதில் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்த குண்டுவெடிப்பு குறித்த தகவல் வெளியானதும் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம், கர்நாடகா ஆகிய கேரளாவை ஒட்டி இருக்கும் மாநிலங்களில் மட்டுமல்லாமல், டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களிலும் போலீஸ் பாதுகாப்பு மற்றும் சோதனை பலப்படுத்தப்பட்டது. தீவிரவாத எதிர்ப்பு படையினரான NIA உட்பட முக்கிய மத்திய குழுக்கள் கேரளாவில் குவிக்கப்பட்டன.
டொமினிக் வெடிகுண்டை வெடிக்க வைத்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன
இந்நிலையில், இன்று மாலை கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்ற நபர், குண்டுவெடிப்புக்கு தானே காரணம் என்று கூறி கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். இவர் குண்டுவெடிப்பு நடந்த அதே 'யெகோவாவின் சாட்சிகள்' கிறிஸ்தவ சபையின் உறுப்பினர் ஆவார். சரணடைவதற்கு முன்பு, குண்டுவைத்ததற்கான காரணத்தை அவர் முகநூல் லைவ் மூலம் தெரிவித்துள்ளார். அது போக, வீட்டில் இருந்தும் மொபைல் போனில் இருந்தும் அவர் வெடிகுண்டை வெடிக்க வைத்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. 'யெகோவாவின் சாட்சிகள்' கிறிஸ்தவ சபை தேச விரோத செயலில் ஈடுபட்டதால் தான் குண்டு வைத்ததாக அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மேலும், பலமுறை சபையுடன் தகராறு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.