உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சூரத் டைமண்ட் போர்ஸை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க இருக்கிறார். இந்த திறப்பு விழாவிற்கு பிறகு, சூரத் டயமண்ட் போர்ஸ், சர்வதேச வைரம் மற்றும் நகை வணிகத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன மையமாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாலிஷ் போட்ட வைரம், பாலிஷ் போடாத வைரம் மற்றும் வைர நகைகள் ஆகிய வர்த்தகத்திற்கான உலகளாவிய மையமாக 'டயமண்ட் போர்ஸ்' இருக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான அதிநவீன வசதிகள், சில்லறை வணிகத்திற்கான நகை வணிக வளாகம், சர்வதேச வங்கி மற்றும் பாதுகாப்பான பெட்டகங்களுக்கான வசதி ஆகியவை இருக்கும்.
கின்னஸ் உலக சாதனை படைத்த சூரத் டைமண்ட் போர்ஸ்
நேற்று பிரதமர் மோடி, இது குறித்து ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். "சூரத்தில் நாளை, சூரத் டைமண்ட் போர்ஸ் திறக்கப்படும். இது வைரத் தொழிலுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். 'சுங்க அனுமதி இல்லம்' , ஜூவல்லரி மால், சர்வதேச வங்கி மற்றும் பாதுகாப்பான பெட்டகங்களின் வசதி ஆகியவை அந்த வளாகத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகளாக இருக்கும்" என்று பிரதமர் மோடி நேற்று தனது பதிவில் கூறி இருந்தார். தோராயமாக ரூ.3,500 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் 67 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டதாகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சூரத் டைமண்ட் போர்ஸ் வளாகம் உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடம் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்தது.