மீண்டும் அருணாச்சல பிரதேச முதல்வர் ஆகிறார் பெமா காண்டு
அருணாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி(BJP) அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பெமா காண்டு இன்று முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெமா காண்டுவின் தலைமையில் பாஜக மொத்தமுள்ள 60 இடங்களில் 46 இடங்களை கைப்பற்றியது. இதனையடுத்து, 2016 இல் முதன்முதலில் முதலைவராக பதவியேற்ற காண்டுவுக்கு மற்றொரு பதவிக் காலம் கிடைத்துள்ளது. இன்று இட்டாநகரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பெமா காண்டு மீண்டும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த கூட்டத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளை பிற்பகல் 3:00 மணிக்கு நடைபெறுகிறது பதவியேற்பு விழா
பாஜக முதல்வராக அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெமா காண்டு, கவர்னர் கேடி பர்நாயக்கை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். அவரது பதவியேற்பு விழா நாளை காலை நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழா நாளை பிற்பகல் 3:00 மணிக்கு நடைபெறும். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பாஜக 46 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 5 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும், அருணாச்சல மக்கள் கட்சி 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இந்நிலையில், தேசிய மக்கள் கட்சி, பாஜக அரசுக்கு ஆதரவு அளித்தாலும், புதிய அமைச்சரவையில் அக்கட்சிக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.