
எல்லை கோடு அருகே பாகிஸ்தான் தொடர்ந்து 8வது நாளாக போர்நிறுத்த மீறல்; இந்திய ராணுவம் பதிலடி
செய்தி முன்னோட்டம்
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நௌஷேரா மற்றும் அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் துருப்புக்கள் தொடர்ந்து எட்டாவது இரவும் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்த மீறல்களைத் தொடர்ந்தன.
இந்த செயலுக்கு இந்திய ராணுவம் தக்க முறையில் பதிலளித்தது என தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கட்டுப்பாட்டுக் கோட்டில்(LoC) மீண்டும் மீண்டும் அத்துமீறல்கள் நடப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான எச்சரிக்கை விடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகும் இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தான் இராணுவத்தின் தூண்டுதலற்ற போர் நிறுத்த மீறல்களை நிவர்த்தி செய்ய இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள்(DGMOக்கள்) செவ்வாயன்று ஹாட்லைன் உரையாடலை நடத்தினர்.
விரிவு
தொடர்ந்து விரிவடையும் பாகிஸ்தானின் மீறல்
ஏப்ரல் 24 இரவு, வடக்கு காஷ்மீரின் குப்வாரா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள பல நிலைகளில் தூண்டப்படாத சிறிய ஆயுதங்களால் ஆரம்பத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தான், பின்னர் பூஞ்ச் துறைக்கும் பின்னர் ஜம்மு பிராந்தியத்தின் அக்னூர் துறைக்கும் விரைவாக தனது போர்நிறுத்த மீறலை விரிவுபடுத்தியது.
அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பானி மற்றும் நௌஷேரா செக்டார்களில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள பல நிலைகள் மீது சிறிய ரக ஆயுதங்கள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஜம்மு மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் உள்ள பர்க்வால் செக்டாருக்கும் துப்பாக்கிச் சூடு விரிவடைந்தது.