Page Loader
பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி
பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்: அசாதுதீன் ஒவைசி

பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி

எழுதியவர் Sekar Chinnappan
May 17, 2025
06:48 pm

செய்தி முன்னோட்டம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க, வெளிநாடுகளுக்குச் செல்லும் மத்திய அரசின் அனைத்துக் கட்சிக் குழுவில் ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசியும் இணைந்துள்ளார். பஹல்காம் மற்றும் ரியாசியில் பொதுமக்கள் கொல்லப்பட்டது உட்பட, சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாத உள்கட்டமைப்பை இந்தியா தாக்கி அழித்தது. இந்நிலையில், ஊடகங்களிடம் பேசிய ஒவைசி, பயங்கரவாதத்தை ஆதரிப்பதில் பாகிஸ்தானின் நீண்டகால பங்கை அம்பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தாக்குதல்கள்

பயங்கரவாதத் தாக்குதல்களை குறிப்பிட்ட அசாதுதீன் ஒவைசி

காந்தஹார் விமானக் கடத்தல், 2001 நாடாளுமன்றத் தாக்குதல், 26/11 மும்பைத் தாக்குதல்கள் மற்றும் உரி மற்றும் பதான்கோட் தாக்குதல்கள் போன்ற சம்பவங்களை மேற்கோள் காட்டி, அவர், "முன்னாள் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கின் காலத்திலிருந்தே பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்து வருகிறது. இந்த வரலாற்றை உலகம் அறிந்து கொள்ள வேண்டும்." என்று கூறினார். பாகிஸ்தானை இஸ்லாமிய நாடு என்று கூறுவதையும் ஒவைசி மறுத்தார். இந்தியாவின் சொந்த முஸ்லீம் மக்கள் தொகையான கிட்டத்தட்ட 200 மில்லியனையும் அதன் மதச்சார்பற்ற அமைப்பையும் எடுத்துக்காட்டினார். இந்தியாவின் செய்தி உலகளாவிய தளங்களில் தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், கனிமொழி உள்ளிட்ட மூத்த எம்பிக்கள் தலைமையில் மத்திய அரசு இதுபோன்ற ஏழு குழுக்களை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.