நாங்குநேரி சம்பவம் : மாணவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை
நாங்குநேரியில் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட மாணவர் சின்னத்துரைக்கு அறுவை சிகிச்சை செய்ய சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் நெல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துளளார். நாங்குநேரியைச் சேர்ந்த அம்பிகாவின் மகன் சின்னத்துரை வள்ளியூரில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரிடம் சில மாணவர்கள் சாதி ரீதியாக மோசமாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், சம்பத்தன்று இரவு சின்னத்துரையை சக மாணவர்கள் வீடு புகுந்து கொடூரமாக வெட்டியுள்ளனர். மேலும் சின்னத்திரையின் சகோதரியையும் வெட்டியுள்ளனர். இருவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், கயல்விழி செல்வராஜ் மற்றும் சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
சென்னை மருத்துவர்களுக்கு அழைப்பு
மருத்துவர்களிடம் ஆலோசனை செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவருக்கு கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்தார். இதற்காக ஸ்டான்லி மருத்துவமனை பரிந்துரைக்கப்பட்டாலும், மாணவனை சென்னை கொண்டு செல்வதில் உள்ள சிரமம் காரணமாக ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்களை ஒரு வாரம் திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டதாகக் கூறினார். மேலும், மாணவருக்கு 18 வயதைக் கடந்தவுடன் அரசு வேலை வழங்கப்படும் என்றும், மாணவர் குணமடைந்து வந்தவுடன், உறைவிடப் பள்ளியில் சேர்த்து கல்வி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையே, அமைச்சர் கயல்விழி மாணவர் படிக்கும் பள்ளிக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, சின்னத்திரையின் குடும்பத்திற்கு தேவையான உதவியை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.