தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்திய சிவசேனா எம்எல்ஏ மகன்; காவல்துறை வழக்கு பதிவு
மகாராஷ்டிரா ஆளும் கட்சிகளில் ஒன்றான சிவசேனா (ஷிண்டே பிரிவு) எம்எல்ஏ பிரகாஷ் சர்வேயின் மகன் ராஜ் சர்வே மற்றும் பலர் மீது, தொழிலதிபரை கடத்திய குற்றச்சாட்டில், மும்பை காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, புதன்கிழமை (ஆகஸ்ட் 9) மும்பையின் கோரேகான் கிழக்கு பகுதியில் இருந்து ஒரு இசை நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் தொழிலதிபர் ராஜ்குமார் சிங்கை, 10-15 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளது. இதுகுறித்து ஊழியர்கள், காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு புகார் தெரிவித்த நிலையில், உடனடியாக செயல்பட்ட காவல்துறை, எம்எல்ஏ மகனின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படும் ராஜ்குமார் சிங்கை மீட்டது.
தொழிலதிபரை கடத்தியதின் பின்னணி
தொழிலதிபர் ராஜ்குமார் சிங்கிடம், ஆதிசக்தி பிரைவேட் லிமிடெட் என்ற யூடியூப் நிறுவனத்தின் தலைவர் மனோஜ் மிஸ்ரா, ரூ.8 கோடி கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. கடனை திருப்பி தருவதில் ஏற்பட்ட பிரச்சினையால் மனோஜ் மிஸ்ரா, சிவசேனா எம்எல்ஏ பிரகாஷ் சர்வேயின் மகன் ராஜ் சர்வேவை அணுக, அவர் ராஜ்குமார் சிங்கை துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளார். மேலும், ராஜ்குமார் சிங்கை எம்எல்ஏ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் கடன் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்த நிலையில்தான், காவல்துறை அவரை மீட்டுள்ளது. ராஜ் சர்வே உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.