கடத்தல் வழக்கில் கர்நாடகா எம்எல்ஏ ஹெச்டி ரேவண்ணா கைது
கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏ ஹெச்டி ரேவண்ணா மீது பதிவு செய்யப்பட்ட கடத்தல் வழக்கு தொடர்பாக கர்நாடக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்ஐடி) கைது செய்தது. ஹெச்டி ரேவண்ணா, அவரது தந்தையும் முன்னாள் பிரதமருமான HD தேவகவுடா வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டதாக இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு ஆதாரங்கள் தெரிவித்துள்ளன. கடத்தல் வழக்கில் கைது செய்ய இடைக்கால பாதுகாப்பு கோரிய எச்.டி.ரேவண்ணாவின் கோரிக்கை பெங்களூரு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, கர்நாடகா போலீஸ் குழு அவரை விரைவில் காவலில் எடுத்தது. 20 வயது இளைஞனின் தாயை ஹெச்டி ரேவண்ணாவின் கூட்டாளி கடத்திச் சென்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ஹெச்.டி.ரேவண்ணா மீது கடத்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு
கடத்தப்பட்ட அந்த பெண்ணும் அவரது மகனும் ரேவண்ணாவின் பண்ணை வீட்டில் உதவியாளராக பணிபுரிந்திருக்கின்றனர். ரேவண்ணாவின் உறவினரான சதீஷ் பாபன்னா என்பவரால் ஏப்ரல் 29 ஆம் தேதி அந்தப் பெண் தனது வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் கலேநல்லியில் உள்ள எம்எல்ஏவின் நெருங்கிய உதவியாளர் ராஜசேகருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அவர் சிறைபிடிக்கப்பட்டார். அந்த பெண்ணை நேற்று முன்தினம் கர்நாடக போலீசார் மீட்டனர். ஹெச்டி ரேவண்ணாவுக்கு எதிராக கடத்தல், கட்டாயக் கட்டுப்பாடு மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் கர்நாடக காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எச்.டி.ரேவண்ணா, அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.