ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்க பிரதமர் வேண்டுகோள்
ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு முன்பாக, அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைக்க இன்று அவர் அங்கு சென்றார். விழாவில், 2 அம்ரித் பாரத் ரயில்கள், கோவை- பெங்களூர் உள்ளிட்ட 6 வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர், அங்கு நடந்த விழாவில் பேசிய பிரதமர், ஸ்ரீ ராமருக்கு பிரச்சனை ஏற்படுத்த கூடாது என்பதால், அயோத்திக்கு வருவதை தவிர்க்குமாறு பக்தர்களை கேட்டுக் கொண்டார்.
"ஒவ்வொரு இந்தியரும் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும்"
"பக்தர்களாகிய நாம் ராமருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுத்த விரும்ப மாட்டோம். நீங்கள் அனைவரும் ஜனவரி 23 முதல் வாழ்க்கை முழுவதும் வரலாம். ராமர் கோவில் இப்போது என்றென்றும் இங்கு இருக்கும்" என பிரதமர் மோடி பேசினார். மேலும், அயோத்திக்கு வருவதற்கு பதிலாக பக்தர்கள் அவர்கள் வீட்டில் விளக்கு ஏற்றும் படியும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது. மிகவும் எதிர்பார்க்கப்படும் ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. இந்நிலையில், கட்டுமான பணிகள் முடிவதற்கு முன்பே, கோவிலை பார்க்க சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுத்து வருகின்றனர். கும்பாபிஷேகத்தில் பங்கேற்க, எதிர்க்கட்சித் தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் உட்பட 8,000 பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.