கோழிக்கோடு ரயில் தீ விபத்தை ஏற்படுத்தியது பயங்கரவாதிகளா: NIA, ATS விசாரணை
செய்தி முன்னோட்டம்
கேரள ரயில் தீ விபத்தை ஏற்படுத்திய குற்றவாளிகளை பிடிக்க தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் இன்று சோதனை நடத்தியது.
கோழிக்கோடு அருகே ஓடும் ரயிலில் ஒருவர் வேண்டுமென்றே பயணிகளை தீ வைத்து எரித்ததில், ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை பயங்கரவாத எதிர்ப்புப் படையுடன்(ATS) இணைந்து, NIA பயங்கரவாத கோணத்தில் விசாரித்து வருகிறது.
இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே பிற மாநிலங்களில் நடந்திருக்கும் நிலையில், கேரள ரயில் தீ விபத்து மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த கோவை மற்றும் மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவங்களில் ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன.
கேரளா
முக்கிய குற்றம்சாட்டப்பட்டவராக பார்க்கப்படும் ஷாரூக் சைஃபி
இரண்டு குண்டுவெடிப்பு சந்தேக நபர்களும் செப்டம்பர் 2022 இல் கேரளாவில் இருந்ததால், இரண்டு சம்பவங்களும் கேரளாவுடன் தொடர்புடையவை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
கோழிக்கோடு ரயில் தீ விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷாரூக் சைஃபியைப் பிடிக்க ரயில்வே காவல்துறையும் NIAவும் நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் இன்று சோதனை நடத்தினர்.
ஷாரூக் சைஃபியைப் போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்று பின் விடுவித்தனர்.
மேலும், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஷாரூக் சைஃபி முக்கிய குற்றம்சாட்டப்பட்டவராக பார்க்கப்படுகிறார்.
ஏப்ரல் 2 ஆம் தேதி, கோழிக்கோடு ரயிலில் பயணிகள் மீது சைஃபி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் 3 பேர் உயிரிழந்தனர், 9 பேர் காயமடைந்தனர்.