10ஆம் வகுப்பு மாணவனுடன் தகாத முறையில் போட்டோஷூட் நடத்திய ஆசிரியை சஸ்பெண்ட்
10ஆம் வகுப்பு மாணவனுடன் தகாத முறையில் புகைப்படம் எடுத்த கர்நாடக ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். புஷ்பலதா ஆர் என்ற ஆசிரியை கர்நாடகாவில் உள்ள முருகமல்ல கிராம அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆவார். இவர் சிக்கபள்ளாப்பூரில் நடந்த ஆய்வுச் சுற்றுலாவின் போது, 10ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுடன் தகாத முறையில் கட்டி பிடிப்பது போலவும் முத்தம் கொடுப்பது போலவும் புகைப்படங்களை எடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலாக பரவியது. இதனையடுத்து, தலைமை ஆசிரியையான புஷ்பலதாவை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
புஷ்பலதாவுக்கு எதிராக புகார் அளித்த மாணவனின் பெற்றோர்
இதனால் ஆத்திரமடைந்த அந்த 10-ம் வகுப்பு மாணவனின் பெற்றோர், அந்த ஆசிரியையின் நடத்தை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தொகுதி கல்வி அதிகாரியிடம் (பிஇஓ) புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட பிஇஓ உமாதேவி பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியதை தொடர்ந்து ஆசிரியை புஷ்பலதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிஇஓ அறிக்கையின் அடிப்படையில் சிக்கபள்ளாப்பூர் மாவட்ட கல்வித் துறை இணை இயக்குனர் நடவடிக்கை எடுத்தார். அதன்பிறகு, தலைமை ஆசிரியை புஷ்பலதா சஸ்பெண்ட் செய்து பொதுக் கல்வித்துறை இணை இயக்குனர்(டிடிபிஐ) பைலாஞ்சினப்பா உத்தரவு பிறப்பித்தார். அந்த தகாத போட்டோஷூட் குறித்து தலைமை ஆசிரியை புஷ்பலதாவிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் அந்த மாணவருடன் பகிர்ந்து கொண்டது "தாய்-மகன் உறவு" போன்றது என்று கூறினார்.