கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலின் வாக்கெடுப்பு மே 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று(மார் 29) அறிவித்துள்ளது. மேலும், மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதே நாளில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். இதற்கு முன், 2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவில், பாஜக 119 இடங்களிலும், காங்கிரஸ் 75 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள JD(S) 28 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. பெரும்பான்மையில் வெற்றி பெற்ற பாஜக, தற்போது பசவராஜ் பொம்மை தலைமையில் கர்நாடகாவில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், கர்நாடக தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று கூறியதாவது:
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 36 எஸ்சிக்களுக்கும், 15 எஸ்டிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,21,73,579 கோடி ஆகும். இதில் ஆண்கள் 2.62 கோடி பேரும், பெண்கள் 2.59 கோடி பேரும் உள்ளனர். கர்நாடகாவில் முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 2018-19ஐ ஒப்பிடுகையில் 9.17 லட்சம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர்கள் அனைவரும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும். கர்நாடகாவில் மொத்தம் 58,282 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 20,866 நகர்ப்புறங்களில் அமைந்துள்ளன. 240 மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் பசுமைச் சாவடிகளாகவும் மாற்றப்படும். 100 சாவடிகள் முற்றிலும் மாற்றுத்திறனாளிகளால் நிர்வகிக்கப்படும். என்று கூறியுள்ளார்.