காவல்துறை சீருடையில் நாசவேலை திட்டம்! ஜந்தர் மந்தர் போராட்டம் மற்றும் முதல்வரைக் குறிவைத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி கைது
செய்தி முன்னோட்டம்
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மாணவர் அமைப்புகளின் போராட்டத்தின் போது, காவல்துறை சீருடையில் ஊடுருவி பெரிய அளவிலான நாசவேலைகளை செய்யத் திட்டமிட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை மேற்கு வங்க மாநில சிறப்பு அதிரடிப் படை கைது செய்துள்ளது. மேற்கு வங்கத்தின் பர்தவான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட மொஹம்மது ஹமீம் மொண்டல் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சதித் திட்டம்
காவல்துறை சீருடை மற்றும் அரசியல்வாதிகளைக் குறிவைத்த சதி
கைது செய்யப்பட்ட ஹமீம் மொண்டல், போலி காவல்துறை சீருடையைக் கைப்பற்றி, டெல்லியில் மாணவர்கள் திரண்டிருந்த ஜந்தர் மந்தர் போராட்டக் களத்திற்குள் ஊடுருவத் திட்டமிட்டிருந்தார்.
போராட்டக் களத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதே பிரதான நோக்கமாக இருந்துள்ளது.
மேலும், பல மூத்த காவல்துறை அதிகாரிகளையும், மாநில அரசியல் தலைவர்களையும் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியிருந்ததாகக் கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிறப்பு அதிரடிப் படை காவல்துறை ஐஜி கௌரவ் சர்மா தெரிவித்துள்ளார்.
முதல்வர்
முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு ஹனி-ட்ராப் சதி
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வந்த ஹமீம் மொண்டல், மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்த தகவலும் வெளியாகி உள்ளது.
அத்துடன், அம்மாநில அரசியல்வாதிகளை Honey-Trap மூலம் வீழ்த்தி பணம் பறிக்கவும், முக்கியப் பிரமுகர்களின் வாரிசுகளைக் கடத்தவும் முயற்சிகளும் ஹமீம் மொண்டலால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு உடந்தையாக இருந்த அர்பிதா சர்க்கார் என்ற பெண்ணை ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் ஹேண்ட்லர்களுடன் என்க்ரிப்ட் தொடர்புகள்
ஹமீம் மொண்டலின் கைபேசி மற்றும் சமூக வலைதளக் கணக்குகளை ஆய்வு செய்த போது, அவன் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பில் இருந்தது உறுதியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கப்பட்ட இந்தத் தொடர்பு, பின்னர் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற என்க்ரிப்ட் செய்யப்பட்ட செயலிகள் மூலம் தொடரப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த ரானா, உஸைர், ஆபித் ஜாட் 333 மற்றும் ஹமத் ஆகிய ஹேண்ட்லர்களுடன் அவன் தீவிர தொடர்பில் இருந்துள்ளான்.
இந்த பயங்கரவாத வலைப்பின்னலில் தொடர்புடைய பிற நபர்களையும் கண்டறியும் பணியில் சிறப்பு அதிரடிப் படையினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.