இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு - தலைமை செயலாளர் பேட்டி
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, 'தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அதிகளவு வரலாறு காணாத கனமழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால் மீட்பு பணிகள் நடந்து வருகிறது' என்று தெரிவித்துள்ளார். அதன்படி தூத்துக்குடியில் 30 ஆயிரம் லிட்டர் மற்றும் நெல்லையில் 64,900 லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 9 ஹெலிகாப்டர்கள் கொண்டு 13,500கிலோ உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 323 கூடுதல் படகுகள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகளவில் எந்தவொரு நகரங்களாலும் இந்தளவு கனமழையினை தாங்க முடியாது - சிவ்தாஸ் மீனா
தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உடனடியாக மின்சாரம் வழங்கினால் உயிர்சேதம் ஏற்படக்கூடும் என்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வடிந்த பின்னர் மின்சாரம் விநியோகிக்கப்படும். கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் 100%மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து, 1,350 பேர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் 16,680 பேர் 160 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். மேலும் அவர், 'இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாகியுள்ளது. ஒருசில இடங்களில் மட்டுமே அதிகனமழை பெய்யும் என்று கூறப்பட்டிருந்தது' என்றும், 'கணிப்பு சரியாக இருந்திருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் சரியாக இருந்திருக்கும்' என்றும் கூறியுள்ளார். உலகளவில் எந்தவொரு நகரங்களாலும் இந்தளவு கனமழையினை தாங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.