
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் இந்தியா - கனடா உறவு; உயர் ஆணையர்களை பணியமர்த்த நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவும் கனடாவும் இராஜதந்திர உறவுகளை இயல்பாக்குவதற்கு பாடுபடுகின்றன. இரு நாடுகளும் பரஸ்பரம் தலைநகரங்களில் உயர் ஆணையர்களை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியது. கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கும் கனேடிய பிரதமர் மார்க் கார்னிக்கும் இடையிலான சமீபத்திய சந்திப்பை மேற்கோள் காட்டி, இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எடுத்துரைத்தார். ஜனநாயக மதிப்புகள், சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை மற்றும் இறையாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா-கனடா உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். உயர் ஆணையர்களை மீண்டும் நியமிப்பதில் தொடங்கி, நிலைத்தன்மையை மீட்டெடுக்க ஆக்கபூர்வமான மற்றும் அளவீடு செய்யப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
காலிஸ்தான்
காலிஸ்தான் பயங்கரவாதி கொலை சர்ச்சை
ஜூன் 2023 இல் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் கடந்த ஆண்டு கடுமையாக அதிகரித்தன. இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா கடுமையாக நிராகரித்ததுடன், அதற்கு பதிலளிக்கும் விதமாக, ஆறு ராஜதந்திரிகளை திரும்ப அழைத்ததுடன், இரு நாடுகளின் உயர் ஆணையர்கள் உட்பட ஆறு கனேடிய தூதர்களை நாடு கடத்தியது. இதையடுத்து கனடாவில் தலைமை மாற்றம் ஏற்பட்டு மார்க் கார்னி பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில், ராஜதந்திர முயற்சிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, வர்த்தகம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட விவாதங்களும் நடந்து வருகின்றன.