
16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்குத் தடை; பிபிசியையும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்தது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஒரு தீர்க்கமான நடவடிக்கையாக, 63 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்துள்ளது.
அரசாங்க வட்டாரங்களின்படி, இந்தியாவிற்கும் அதன் பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக ஆத்திரமூட்டும், வகுப்புவாத உணர்வுபூர்வமான மற்றும் தவறான உள்ளடக்கத்தைப் பரப்பியதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தடைசெய்யப்பட்ட சேனல்களில் டான், சமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், ரஃப்தார், ஜியோ நியூஸ் மற்றும் சுனோ நியூஸ் போன்ற முக்கிய பாகிஸ்தானிய செய்தி நிறுவனங்கள் அடங்கும்.
தனிநபர்
தனிநபர் யூடியூப் சேனல்களுக்கு தடை
இர்ஷாத் பாட்டி, அஸ்மா ஷிராசி, உமர் சீமா மற்றும் முனீப் ஃபரூக் போன்ற பத்திரிகையாளர்களின் தனிப்பட்ட யூடியூப் சேனல்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
தி பாகிஸ்தான் ரெஃபரன்ஸ், சமா ஸ்போர்ட்ஸ், உசைர் கிரிக்கெட் மற்றும் ராசி நாமா போன்ற கூடுதல் சேனல்களும் தடையில் சேர்க்கப்பட்டுள்ளன.
25 சுற்றுலாப் பயணிகளும் ஒரு உள்ளூர்வாசியும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மிகவும் பதட்டமாக இருக்கும் நேரத்தில், இந்த தளங்கள் தவறான கதைகளையும் தவறான தகவல்களையும் பரப்பி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிபிசி
கண்காணிப்பு வளையத்தில் பிபிசி
இதற்கிடையே, பிரிட்டிஷ் ஊடகமான பிபிசியும் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது.
குறிப்பாக, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பயங்கவாதிகள்/தீவிரவாதிகள் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக போராளிகள் (Militants) என்று பிபிசி குறிப்பிட்டதை அடுத்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் பிபிசியின் செய்திகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து இந்தியாவின் கடும் அதிருப்தியை வெளியுறவு அமைச்சகம் பிபிசியின் இந்தியத் தலைவர் ஜாக்கி மார்ட்டினுக்குத் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.