உச்ச நீதிமன்றத்தில் 5 கோடி வழக்குகள் நிலுவை; பழமையான வழக்குகளை முடிக்க 4 சிறப்பு அமர்வுகள் நியமனம்
செய்தி முன்னோட்டம்
இந்திய உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் பழமையான வழக்குகளை விரைந்து முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒரு வரலாற்று சிறப்புமிக்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்படி, நீதிமன்றத்தின் மிகப்பழமையான வழக்குகளை மட்டும் பிரத்யேகமாக விசாரிப்பதற்காக நான்கு தனி அமர்வுகள் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ளன. கோடைக்கால பகுதி விடுமுறைக்கு பிறகு உச்ச நீதிமன்றம் தனது முழு அளவிலான செயல்பாடுகளை ஜூலை 13 முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் புதிய திட்டத்தை அறிவித்து பேசிய CJI,"பல தசாப்தங்களாகத் தீர்வுக்காகக் காத்திருக்கும் சாமானியர்களின் வழக்குகளை, அவை பழமையானவை என்ற ஒரே காரணத்திற்காகத் தொடர்ந்து புறக்கணிக்க முடியாது. இதற்காகவே இந்தத் தனி அமர்வுகள் உருவாக்கப்பட்டுள்ளன" என்று உறுதியளித்துள்ளார்.
சிறப்பு அமர்வுகள்
4 பிரத்யேக சிறப்பு அமர்வுகள் மற்றும் 800 வழக்குகள்
புதிய விதிகளின்படி, வாரத்தின் முக்கிய பணி நாட்களான செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த அமர்வுகள் வழக்கமான புதிய வழக்குகளின் சுமையின்றி, பழமையான வழக்குகளை மட்டும் முழுமையாக விசாரிக்கும். நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் எஸ்.வி.என். பட்டி ஆகியோர் தலைமையிலான இரு தனி அமர்வுகள் மிகப்பழமையான சிவில் வழக்குகளை விசாரிக்கும். நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் தலைமையிலான இரு தனி அமர்வுகள் பழமையான கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும். முதற்கட்டமாக, இந்த நான்கு அமர்வுகளுக்கும் தலா 200 வழக்குகள் வீதம், மொத்தம் சுமார் 800 மிகப்பழமையான வழக்குகள் விரைவான விசாரணைக்காக அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி பொறுப்பேற்ற பிறகு கொண்டு வந்துள்ள மிகமுக்கியமான நிர்வாகச் சீர்திருத்தமாக இது பார்க்கப்படுகிறது.
வழக்குகள்
5 கோடி வழக்குகள்: மாற்று வழிமுறைகளின் அவசியம்
தேசிய நீதித்துறை தரவு அமைப்பின் (NJDG) கணக்கீட்டின்படி, உச்ச நீதிமன்றத்தில் மட்டும் தற்போது 95,911 வழக்குகள் (74,145 சிவில் மற்றும் 21,766 கிரிமினல்) நிலுவையில் உள்ளன. இந்திய அளவில் ஒட்டுமொத்த நீதிமன்றங்களிலும் சேர்த்து 5 கோடிக்கும் (50 மில்லியன்) அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் நடைபெற்ற இந்திய நடுவர் மற்றும் சமரச மையத்தின் (IIAM) வெள்ளி விழா கொண்டாட்டத்தில் பேசிய அவர், வெறும் நீதிமன்ற விசாரணைகள் மூலமாக மட்டுமே இந்த இமாலயப் பற்றாக்குறையை சரிசெய்துவிட முடியாது என்றும், அதற்கு மாற்றாக மத்தியஸ்தம், நடுவர் தீர்ப்பாயம் மற்றும் இணையவழித் தீர்வு முறைகளைத் தங்களின் துணைத் தூண்களாக மக்கள் பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.