
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்
செய்தி முன்னோட்டம்
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, இம்மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) மத்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) அறிவித்துள்ளது.
மலைப் பகுதிகளில் கன முதல் அதி கனமழை எதிர்பார்க்கப்படுவதால், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளுக்கான அபாயம் காணப்படுவதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. முன்தினம் இரவு முதல் தொடங்கிய கனமழை கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களை பெரிதும் பாதித்துள்ளது.
இந்த மழை நேற்று முழுவதும் நீடித்து, பல இடங்களில் வெள்ள நிலைமையை உருவாக்கியுள்ளது.
அறிவிப்பு
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு
தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் சில இடங்களில் கனமழை பதிவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக பொதுமக்கள் அவசர தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.