கடந்த மாதம் கை அகற்றப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது
கடந்த மாதம், கை அகற்றப்பட்ட ராமநாதபுரம் குழந்தை, இன்று(ஆகஸ்ட் 6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. ராமநாதபுரத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மகீர், குறை பிரசவத்தில் 1.5 கிலோ எடையுடன் பிறந்தது அந்த குழந்தைக்கு தீவிர hydrocephalus எனும் மூளையில் நீர் கசியும் கோளாறு இருந்தது. தொடர்ந்து ராமநாதபுரத்திலிருந்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது குழந்தை. குழந்தைக்கு, சென்னை அரசு மருத்துவமனையில், மூளையில் ஏற்படும் நீர் கசிவை உறிஞ்ச, VP shunt என்ற மருத்துவக்கருவி பொருத்தப்பட்டது. பொருத்தப்பட்ட VP shunt, வெளியே வந்துவிட்டதால், அதை அகற்றிவிட்டு மீண்டும் புதிதாக VP shunt பொருத்தப்பட்டது. அதற்காக நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப்பின் போது குழந்தையின் வலது கையில் ரத்த உறைவு ஏற்பட்டது.
மருத்துவமனை மீது குற்றம் சாட்டிய குழந்தையின் பெற்றோர்
அந்த உறைவை நீக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும், ரத்த உறைவு வலது கை முழுவதும் பரவியதால், கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது. தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த செய்தியின் தொடர்ச்சியாக முறையான விசாரணை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்ரமணியம் அறிவித்தார். குழந்தையின் அகற்றப்பட்டதற்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையே காரணம் என்று குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. விசாரணையில் மருத்துவமனையின் மீது எந்த தவறும் இல்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில், தற்போது ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தை இன்று உயிரிழந்தது.