Page Loader
ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி 
மத்திய அரசு இதற்கான பதிலை வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி 

எழுதியவர் Sindhuja SM
Apr 27, 2023
06:11 pm

செய்தி முன்னோட்டம்

ஒரே பாலின திருமணங்களை ஏற்று கொள்ள முடியாது என்றால், ஒரே பாலின தம்பதிகளுக்கு அடிப்படை சமூக உரிமைகளை வழங்குவதற்கான வழியை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று(ஏப் 27) மத்திய அரசிடம் கூறியது. ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிப்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பான மேல்முறையீடுகளின் தொகுப்பை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஒரே பாலின தம்பதிகளுக்கு திருமண உரிமையை மறுப்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு சமம் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். இதற்கு எதிராக மத்திய அரசு சார்பில் பேசிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இது போன்ற சட்டங்களை நாடாளுமன்றம் தான் இயற்ற வேண்டும் என்று கூறினார்.

details

அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சமூக பலன்கள் எப்படி வழங்கப்படும்: உச்ச நீதிமன்றம் 

அவர் கூறியதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட். "இதை நாடாளுமன்றம் தான் இயற்ற வேண்டும் என்ற கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். சரி, இப்போது என்ன செய்வது? 'சேர்ந்து வாழும்' இந்த திருமணமாகாத உறவுகளுக்கு அரசாங்கம் என்ன செய்யும்? அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சமூக பலன்கள் எப்படி வழங்கப்படும்? அத்தகைய உறவுகள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வது எப்படி?" என்று கேட்டார். மேலும், அத்தகைய தம்பதியருக்கு கூட்டு வங்கிக் கணக்குகளைத் திறப்பது, காப்பீட்டுக் கொள்கைகளில் பங்குதாரரை சேர்ப்பது போன்ற அடிப்படை சமூக உரிமைகள் வழங்குவதற்கான வழியை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார். மத்திய அரசு இதற்கான பதிலை வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.