Page Loader
தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட்

தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Jan 19, 2025
03:51 pm

செய்தி முன்னோட்டம்

திருநெல்வேலியில் இன்று (ஜனவரி 19) கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கிழக்கு திசை காற்றின் மாறுபாடுகள் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 29-30° செல்சியஸ் மற்றும் 23-24° செல்சியஸாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள்

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில் தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, கன்னியாகுமரியை ஒட்டியுள்ள கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 35-45 கிமீ வேகத்தில், மணிக்கு 55 கிமீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இன்றும் நாளையும் இந்தப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாளை (ஜனவரி 20), குறிப்பாக தென் தமிழகம், வட தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் அதிகாலை மூடுபனியும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.