ஜி20 - 21வது நிரந்தர உறுப்பு நாடாக இணைந்தது ஆப்பிரிக்க யூனியன்
ஜி20 அமைப்பிற்கு இந்தாண்டு இந்தியா தலைமையில் நடக்கும் நிலையில், இதன் 18வது உச்சி மாநாடு இன்றும், நாளையும் டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது. இதற்கு உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் வருகை தரும் நிலையில், டெல்லியில் அனைத்து விட ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இம்மாநாட்டிற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், 14 சர்வதேச அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், ஐரோப்பிய யூனியனை சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்னர். பிரதமர் மோடி அவர்களை உற்சாகமாக வரவேற்றார்.
ஆப்பிரிக்க யூனியன் இணைந்ததன் மூலம் மேலும் வலுப்பெற்ற ஜி20
இதனை தொடர்ந்து, இன்று(செப்.,9) நடக்கும் இந்த மாநாட்டில் ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்கா யூனியன் இணைக்கும் நிகழ்வு நடந்தது. ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய யூனியனான ஆப்பிரிக்க யூனியன் இந்த அமைப்பில் இணைந்துள்ளது உலகத்தலைவர்கள் கவனத்தினை ஈர்த்துள்ளது. இந்த ஆப்பிரிக்க யூனியனில் 55 நாடுகள் உள்ள நிலையில், ஜி20 அமைப்பானது மேலும் வலுப்பெற்றுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதனிடையே முன்னதாக மாநாடு துவங்கியவுடன், மொராக்கோ நாட்டில் நேர்ந்த சக்திவாய்ந்த பூகம்பத்தில் சிக்கி மரணமடைந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.