சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார்
சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும், கண் மருத்துவருமான எஸ்.எஸ்.பத்ரிநாத்(83) இன்று(நவ.,21) காலமானார். இந்தியாவில் இயங்கும் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்று தான் சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனை. இதன் இந்திய நிறுவனர் மற்றும் தலைவருமான பத்ரிநாத் தனது சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துள்ளார். தனது தந்தையின் காப்பீட்டு தொகையினை கொண்டு மருத்துவ படிப்பினை முடித்துள்ளார். 1963ம் ஆண்டு மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், நியூயார்க் சென்று கிளாஸ்லேண்ட்ஸ் மருத்துவமனையில் ஒருவருட உள்மருத்துவ படிப்பினை முடித்தார். பின்னர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கண் மருத்துவம் பயின்று, கண் மருத்துவராக பணியாற்றியுள்ளார். 1970ல் இந்தியா திரும்பிய இவர், 6 ஆண்டுகள் தன்னார்வ சுகாதார சேவைகளை மேற்கொண்டுள்ளார்.
1978ல் சென்னையில் துவங்கப்பட்ட மருத்துவமனை
அதன் பின்னர் 1978ல் சென்னையில் பார்வை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளைகளை நிறுவியுள்ளார். சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஓர் பிரிவாக செயல்படும் இம்மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 1200 பேருக்கு இலவசமாக சிகிச்சையளிக்கப்படுவதோடு, 100 அறுவை சிகிச்சைகளும் இலவசமாக செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஏழை மக்களுக்கு உதவும் நோக்கில் இந்த மருத்துவமனையினை அவர் துவக்கினார். மேலும் இந்த நிறுவனம் கண் மருத்துவத்தில் பட்டதாரிகளுக்கான பயிற்சி திட்டங்களும் வழங்கப்படுகிறது. இவர் ஆற்றிய சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், சிவிலியன், டாக்டர்.பி.சி.ராய், உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை தனது இல்லத்தில் காலமானார். அவரது மரணத்திற்கு பல்வேறு தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.