Page Loader
மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் கமிஷனர் அருண் கோயல் ராஜினாமா 

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் கமிஷனர் அருண் கோயல் ராஜினாமா 

எழுதியவர் Sindhuja SM
Mar 09, 2024
09:51 pm

செய்தி முன்னோட்டம்

மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் இன்று ராஜினாமா செய்தார். மக்களவை தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது ராஜினாமாவை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். அவர் ஏன் பதவி விலகினார் என்பது உடனடியாக தெரியவில்லை. கோயல் ராஜினாமா செய்ததால், ஒட்டுமொத்த தேர்தலையும் கண்காணிக்கும் பொறுப்பு தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மீது விழுந்துள்ளது. அருண் கோயல் பஞ்சாப் கேடரைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். அவர் 21 நவம்பர் 2022 அன்று அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் 2027 இல் முடிவடைகிறது. கோயல் முன்பு கனரக தொழில்துறை அமைச்சகத்தில் செயலாளராகப் பணியாற்றினார்.

தேர்தல்

தேர்தலுக்கான தேதிகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தகவல் 

மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அடுத்த வாரம் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் என்று இந்தியா டுடே டிவி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. "தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023 இன் பிரிவு 11 இன் பிரிவு (1) இன் படி, ஸ்ரீ அருண் கோயல் அளித்த ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார். " என்று ஒரு வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருண் கோயல் மக்களவை தேர்தல் ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை மேற்பார்வையிட பல மாநிலங்களுக்கு அவர் பயணம் செய்தார். இதற்கிடையில், அவர் ராஜினாமா செய்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.