தொடர்ந்து இரண்டாவது நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கும் அமலாக்கத்துறை
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, தற்போது இதய அறுவை சிகிச்சை முடிந்து புழல் சிறையில், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த வேண்டுமென நீதிமன்றத்தை நாடிய அமலாக்க துறையினருக்கு, ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை, அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று புழல் சிறையிலிருந்து, சென்னையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். நேற்று விடியவிடிய 10 மணிநேரம் தொடர்ந்த விசாரணை, இன்று மீண்டும் தொடரும் என கூறப்படுகிறது. நாளொன்றுக்கு 50 கேள்விகள் என்ற அடிப்படையில், மொத்தம் 200 கேள்விகள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.