Page Loader
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று தகனம்; பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று தகனம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று தகனம்; பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி

எழுதியவர் Sekar Chinnappan
Dec 15, 2024
10:03 am

செய்தி முன்னோட்டம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது 75வது வயதில், நீண்டகால உடல்நலக்குறைவால் நேற்று (டிசம்பர் 14) காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு சென்னை முகலிவாக்கம் மின் மயானத்தில் நடைபெறுகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இளங்கோவன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாசம் உள்ளிட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

தலைவர்கள் அஞ்சலி

அரசியல் தலைவர்கள் அஞ்சலி

அங்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி போன்ற முக்கிய பிரமுகர்களும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. இளங்கோவனின் மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, அவரது மகன் திருமகன் ஈவேராவின் மறைவுக்குப் பிறகு, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருந்தார். தற்போதைய சட்டமன்ற காலத்திற்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளதால், விரைவில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.