'பெண்களை வழிபட வேண்டாம், சமமாக நினைத்தால் போதும்': நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச்சு
மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரைவு மற்றும் தாக்கல் செய்வது குறித்து திமுக எம்பி கனிமொழி இன்று மக்களவையில் பேசினார். மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும், நாரி சக்தி வந்தான் ஆதினியம் என்ற மசோதாவை நேற்று அரசு அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா குறித்த விவாதம் இன்று மக்களவையில் நடந்து வருகிறது. அந்த விவாதத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, மகளிர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்படுவதை ஏன் அரசாங்கம் ரகசியமாக வைத்திருந்தது என்று கேள்வி எழுப்பினார். 27 ஆண்டுகளாக நிலுவையில் கிடக்கும் மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி பிற கட்சிகளிடம் ஆலோசனை நடத்தியதா என்று கேள்வி எழுப்பிய கழிமொழி தன் உரையை தொடங்கினார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து எம்பி கனிமொழி இன்று பேசியதாவது:
"நானே இந்தப் பிரச்சினையை(மகளிர் மசோதா) நாடாளுமன்றத்தில் பலமுறை எழுப்பி இருக்கிறேன். ஆனால், அரசின் பதில் ஒரே மாதிரியாக தான் இருந்தது. 'அனைத்து அரசியல் கட்சிகளையும் ஈடுபடுத்தி, மசோதாவை கொண்டு வருவதற்கு முன் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்.' என்று அவர்கள் கூறி வந்தனர். இப்போது என்ன ஒருமித்த கருத்து உருவானது? என்ன விவாதங்கள் நடத்தப்பட்டன என்பதை நான் அறிய விரும்புகிறேன். இந்த மசோதா ரகசியமாக கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக கூட்டப்பட்டது என்பதே எங்களுக்குத் தெரியவில்லை. அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த மசோதா குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரசியல் தலைவர்கள் யாரையும் விவாதத்திற்கு அழைத்தார்களா என்று தெரியவில்லை. திடீரென்று எங்கள் கணினிகளில் இந்த பில்(மசோதா) 'பாப் அப்' ஆகிறது."
இந்தியில் கிசுகிசுத்தவருக்கு தமிழில் பதிலடி கொடுத்த கனிமொழி
"இந்த அரசாங்கம் இப்படித்தான் செயல்படப் போகிறதா?" என்று மேலும் கேள்வி எழுப்பிய அவர், நாடாளுமன்ற அதிகாரிகளின் சீருடைகள் திடீரென்று மாற்றப்பட்டதை சுட்டிகாட்டி பேசினார். "நாடாளுமன்ற ஊழியர்களின் சீருடையில் இருந்து திடீரென்று தாமரைகள் மலர்வதை நாங்கள் பார்க்கிறோம். இப்படி எல்லாமே திடீரென்று தான்நடக்க போகிறதா?" என்று அவர் பாஜகவை சாடினார். பொதுவாக, கனிமொழி அவையில் பேசும்போது யாரவது இந்தியில் கிசுகிசுத்தால் அவர் தமிழில் பதிலடி கொடுப்பார். அதேபோல இன்றும் ஒரு நிகழ்வு நடந்தது. அவர் பேசி கொண்டிருக்கும் போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஏதோ ஒன்றை இந்தியில் சொல்ல, அதற்கு பதிலளித்த கனிமொழி, "நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. எனக்குப் புரியாதபோது நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்?" என்று தமிழில் பதிலடி கொடுத்தார்.
பெண்களுக்கான சம உரிமை குறித்து கனிமொழி பேசியதாவது:
"மேலும், இந்த மசோதா நிறைவேறும் என்று காத்திருக்கும் என் கோடிக்கணக்கான சகோதரிகள் இன்னும் இதற்காக காத்திருக்க வேண்டும் என்று சொன்னவுடன் என் இதயம் கனத்தது. இந்த மசோதா எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரியவில்லை. இந்த மசோதா 'நாரி சக்தி வந்தான் மசோதா' என்று அழைக்கப்படுகிறது. ஆனால், எங்களுக்கு வணங்குவதை முதலில் நிறுத்துங்கள்! எங்களுக்கு வணக்கம்... கும்பிடு போடுவதை நிறுத்துங்கள். அம்மா, சகோதரி அல்லது மனைவி என்று அழைக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் சமமாக மதிக்கப்பட விரும்புகிறோம். உங்களுடன் இறங்கி சமமாக நடக்க விரும்புகிறோம். இந்த நாட்டின் மீது எங்களுக்கு உரிமை உள்ளது. இந்த நாடு எங்களுக்கு சொந்தமானது. இந்த நாடாளுமன்றமும் எங்களுக்குச் சொந்தமானது."